Published : 16 Jul 2021 03:12 AM
Last Updated : 16 Jul 2021 03:12 AM

பயன்பாட்டுக்கு வரும் முன்பே பாதாள சாக்கடை பணிக்காக மதுரை வைகை கரை சாலையை சேதப்படுத்திய மாநகராட்சி

மதுரை வைகை கரையில் ரூ.300 கோடியில் அமைக்கப்பட்டுள்ள சாலை இன்னும் முழுமையான பயன்பாட்டுக்கு வரவில்லை. ஆனால், அதற்குள் பாதாள சாக்கடை அமைப்பதற்காக மாநகராட்சி பள்ளம் தோண்டுவது பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வைகை ஆற்றின் இருகரையோரப் பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலைத் துறையும், மாநகராட்சியும் இணைந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.384 கோடியில் 50 அடி அகல சாலையை அமைத்து வருகின்றன.

இதில், குரு தியேட்டர் பாலம் முதல் ராஜா மில் ரோடு வரையிலும், குருவிக்காரன் சாலை முதல் விரகனூர் வரையிலும் ரூ.300 கோடிக்கு தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாலை அமைக் கப்பட்டுள்ளது. ராஜா மில் ரோடு பகுதியில் இருந்து குருவிக்காரன் சாலை வரை மாநகராட்சி நிர்வாகம் ரூ.84 கோடியில் சாலை அமைக்கிறது.

தற்போது தேசிய நெடுஞ்சாலைத் துறை சாலை அமைக்கும் பணியை நிறைவு செய்துள்ளது. ஆனால் மாநகராட்சி அமைக்கும் சாலை முழுமை அடையவில்லை. ஆக்கிரமிப்பை அகற்ற உறுதியான நடவடிக்கை எடுக்க முடியாமல் மாநகராட்சி திணறி வருகிறது.

இந்நிலையில், வைகை ஆற்றின் தென்கரைப் பகுதியில் தேசிய நெடுஞ் சாலைத் துறை சார்பில் அமைக்கப்பட்ட நான்குவழிச் சாலையில் பாதாள சாக்கடைத் திட்டத்துக்காக பல்வேறு இடங்களில் பள்ளம் தோண்டும் பணியை மாநகராட்சி ஊழியர்கள் தொடங்கினர். இந்த நான்கு வழிச் சாலை திட்டம் இன்னும் முழுமையாக பயன்பாட்டுக்கு வராத நிலையில், பல கோடி ரூபாய் செலவு செய்து அமைக்கப்பட்ட சாலையை மாநகராட்சி சேதப் படுத்தி வருவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியில் பாதாள சாக்கடைத் திட்டத்தை முடித்துவிட்டு புதிய சாலை அமைத்திருக்க வேண்டும். அதை செய்யாமல், சாலை அமைத்த பின் பள்ளம் தோண்டுவது சரியான நடவடிக்கையா என்ற கேள்வி எழுகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகா ரிகளிடம் கேட்டபோது, "தற்போது சாலையில் குழி தோண்டினாலும் அதை உடனடியாக சரி செய்து சீரமைத்து விடுவார்கள்" என்றனர்.

சமூக ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், மாநகராட்சி கூறுவதுபோல் குழி தோண்டிய இடங்களை சீரமைத்தாலும் புதிதாக அமைக்கப்பட்ட சாலை அளவுக்கு தரமாக இருக்காது. பள்ளம் தோண்டிய இடத்தில் பேட்ச் ஒர்க்காக சாலை அமைத்தாலும் சில நாட்களிலேயே விரிசல் விட்டு, அந்த இடத்தில் மீண்டும் பள்ளம் ஏற்பட்டு விடும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x