Published : 16 Jul 2021 03:12 AM
Last Updated : 16 Jul 2021 03:12 AM

நுகர்பொருள் கிடங்கில் நாற்றாக முளைத்த நெல்மணிகள்: திருப்புவனம் அருகே பல ஆயிரம் மூட்டைகள் சேதம்

திருப்புவனம், சிவகங்கை வட்டங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள், திருமாஞ்சோலை நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டன. போதிய இடம் இல்லாததால் திறந்தவெளியில் வைக்கப்பட்டன.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக அப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதில் மழையில் நனைந்து பல ஆயிரம் மூட்டைகள் சேதமடைந்தன. மேலும் சில மூட்டைகளில் நெல் மணிகள் நாற்றுகளாக முளைத்துவிட்டன. இதன் மூலம் அரசுக்குப் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து திறந்தவெளியில் உள்ள நெல் மூட்டைகளைப் பாதுகாக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், கொள்முதல் செய்த நெல் மூட்டைகளுக்கு ஏற்ப கட்டிட வசதி இல்லை. அதனால் திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டன. மேலும் மழைநீரில் பாதிக்காமல் இருக்க கீழே கம்புகளை அடுக்கி, அதன்மீதுதான் நெல் மூட்டைகளை வைத்துள்ளோம். மேற்புறமாக தார்ப்பாயை வைத்து மூடி வைத்தோம். இருந்தபோதிலும் சில மூட்டைகளுக்குள் மழைநீர் ஊடுருவியது. அவற்றைக் காய வைத்துள்ளோம். இன்னும் ஓரிரு மாதங்களில் நெல் மூட்டைகளை அரவைக்கு அனுப்பிவிடுவோம், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x