Published : 16 Jul 2021 03:13 AM
Last Updated : 16 Jul 2021 03:13 AM

நெல் கொள்முதல் தொகையை வழங்காததை கண்டித்து தேசூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு பூட்டு: காவல் துறையினர் பேச்சுவார்த்தை

கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளுக்கான பணத்தை வழங்காததைக் கண்டித்து தேசூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு பூட்டுப் போட்டு விவ சாயிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தேசூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில், சுற்றுப்புற கிராமங்களில் உள்ள விவசாயிகள், நெல் மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்து கொடுத்துள்ளனர். இந்நிலையில், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளுக்கு கடந்த 3 மாதங்களாக நிர்வாகம் பணம் வழங்கவில்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். இது குறித்து அதிகாரிகளிடம் முறை யிட்டும் பலனில்லை.

இதனால் ஆத்திரமடைந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் பிரதான இரும்பு வாயில் கதவுக்கு பூட்டுப் போட்டு நேற்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளுக்கான பணத்தை வழங்க வலியுறுத்தி முழக்க மிட்டனர். அப்போது அவர்கள் கூறும் போது, “எங்களைப் போன்ற 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நெல் மூட்டைகளை கொடுத்து 3 மாதங் களாகிறது. ஆனால், அதற்குரிய பணத்தை எங்களுக்கு வழங்காமல் பல லட்சம் ரூபாய் நிலுவை வைத்துள்ளனர். இதுகுறித்து கேட்டால் ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் எங்களை தரக் குறைவாக பேசுகின்றனர். எனவே, உடனடியாக நெல் விற்பனைக்கான பணத்தை வழங்கக் கோரி இந்த ஒழுங்குமுறை விற்பனை கூட கதவை பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்” என்றனர்.

இதுப்பற்றி தகவலறிந்த தேசூர் காவல் துறையினர், ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், பணத்தை விரைவாக பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதன்பேரில், போராட்டத்தை கைவிட்டு விவ சாயிகள் கலைந்து சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x