Published : 15 Jul 2021 08:31 PM
Last Updated : 15 Jul 2021 08:31 PM

கூட்டுறவு சங்கங்களில் ரூ.9,000 கோடி அளவுக்குக் கடன் மோசடி; விசாரணை கோரிய வழக்கு: அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை

அதிமுக ஆட்சியின்போது நடைபெற்ற கூட்டுறவு சங்கத் தேர்தலில் முறைகேடு நடந்ததாக அளித்த புகார் குறித்து விரிவான விசாரணை நடத்தக் கோரிய வழக்கில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், மாணிக்காபுரம் புதூரைச் சேர்ந்த விஸ்வலிங்க சாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அவரது மனுவில், “2018ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டுறவு சங்கத் தேர்தலின்போது, திருப்பூர் மாணிக்காபுரம் புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க இயக்குநர் பதவிக்குப் போட்டியிட நான் விண்ணப்பித்தேன். ஆனால், தேர்தல் நடத்தாமலேயே சட்டவிரோதமாக வேறொருவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதேபோல் தமிழகம் முழுவதும் 95% கூட்டுறவு சங்கங்களுக்கு முறையான தேர்தல் நடத்தாமல் கடந்த அதிமுக ஆட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளே தன்னிச்சையாகத் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், கூட்டுறவு சங்கங்களில் சுமார் 9 ஆயிரம் கோடி அளவிற்குக் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் கடன் மோசடி நடைபெற்றுள்ளது.

கடந்த ஆட்சிக் காலத்தில் ஆளுங்கட்சியின் நிர்வாகிகளே தலைவராக இருந்ததால் தங்களுடைய பினாமிகளுக்குக் கடன் அளித்தனர். இதனால் அவர்கள்தான் அதிக பலன் அடைந்தனர். மேலும், தற்போது தமிழக முதல்வர் அறிவித்துள்ள கூட்டுறவு சங்கக் கடன் தள்ளுபடி 11,500 கோடி ரூபாயில் அதிமுகவைச் சேர்ந்தவர்களே அதிகம் பயன்பெற்றார்கள். எனவே இதுகுறித்து உரிய விரிவான விசாரணை நடத்த வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு குறித்து தமிழக அரசு விசாரணை நடத்தி, அதுகுறித்த அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x