Published : 15 Jul 2021 04:33 PM
Last Updated : 15 Jul 2021 04:33 PM

கரோனா நிவாரணம்; மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.133 கோடி ஒதுக்கீடு செய்ததை முழுமையாக வழங்குக: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்

சென்னை

கரோனா நிவாரண நிதியாக மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்குவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 133 கோடி ரூபாயை முழுமையாக வழங்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா பரவலைத் தடுக்க கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக, வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்கக் கோரி, மூன்று அமைப்புகளின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளைக் கடந்த முறை விசாரித்த நீதிபதிகள், உதவித்தொகை வழங்க அரசு ஒதுக்கீடு செய்த 133 கோடி ரூபாயில் வழங்கப்பட்ட 69 கோடி ரூபாய் தவிர மீதமுள்ள 64 கோடி ரூபாயின் நிலை என்ன,133 கோடி ரூபாய் தொகை எப்படி விநியோகிக்கப்பட்டது என்பது குறித்த விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று (ஜூலை 15) மீண்டும் இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தன.

அப்போது மனுதாரர் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்புத் தொகை, பென்ஷன் வழங்குவது குறித்த விவரங்கள் மட்டுமே அரசு தாக்கல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், உதவித்தொகை குறித்த விவரங்கள் முறையாகத் தெரிவிக்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டது.

மேலும், மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் பாதுகாப்புச் சட்டப்படி மற்றவர்களுக்குக் கொடுக்கும் நிவராணத் தொகையை விட, 25% அதிகமாக மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டும், ஆனால், கரோனா நிவாரண நிதியாக மாற்றுத்திறனாளிக்கு 1,000 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஒதுக்கீடு செய்யப்பட்ட நிவாரணத் தொகையை மாற்றுத்திறனாளிகளைக் கண்டறிந்து வழங்க வேண்டும் என, மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக, தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கை முழுமையாக இல்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கவேண்டிய தொகை எவ்வளவு, எந்த முறையில் வழங்கப்பட வேண்டும் என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், பொருளாதார அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளை வகைப்படுத்தலாம் என்றும் தெரிவித்தனர்.

மேலும், ஒதுக்கீடு செய்யப்பட்ட 133 கோடி ரூபாய் முழுமையாக 13.35 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்கப்பட வேண்டும் எனத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கிய விவரம் குறித்து விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 4 வாரத்துக்குத் தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x