Published : 15 Jul 2021 04:18 PM
Last Updated : 15 Jul 2021 04:18 PM

கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு; அறநிலையத் துறை மீது உயர் நீதிமன்றம் அதிருப்தி: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்

சென்னை

கோயில் நிலங்களைப் பாதுகாப்பதில் அஜாக்கிரதையாகச் செயல்படுவதாக, அறநிலையத்துறை மீது அதிருப்தி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், கோயில் நிலங்களை மீட்க உரிய வழிமுறைகளை மேற்கொள்ளாவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அகத்தீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான நில ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிடக் கோரி, தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 2019ஆம் ஆண்டு கோயில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று (ஜூலை 15) விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், கோயிலுக்குச் சொந்தமான நிலத்தின் அளவும், மீட்டதாக அரசு தெரிவிக்கும் அளவும் முரணாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கோயிலுக்குச் சொந்தமான நிலம் எவ்வளவு? ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் எவ்வளவு? மீட்கப்பட்ட நிலம் எவ்வளவு என, விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், கோயில் நிலங்களைப் பாதுகாப்பதிலும், ஆக்கிரமிப்புகளை மீட்கும் நடவடிக்கைகளிலும் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் அஜாக்கிரதையாகச் செயல்படுவதாக நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

ஆக்கிரமிப்புகளை மீட்க உரிய வழிமுறைகளை எடுக்காவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து, வழக்கை இரண்டு வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x