Published : 15 Jul 2021 01:58 PM
Last Updated : 15 Jul 2021 01:58 PM

இருசக்கர வாகனங்களில் கண்ணாடிகளை அகற்றினால் வாரண்டி கிடையாது; வாகன விற்பனையாளர்களை அறிவுறுத்த வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்

சென்னை

இருசக்கர வாகனங்களில் கண்ணாடிகளை அகற்றினால் வாரண்டி கிடையாது என, நுகர்வோரை எச்சரிக்கும் வகையில் வாகன விற்பனையாளர்களை அறிவுறுத்த வேண்டும் எனத் தமிழக போக்குவரத்துத் துறை ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பின்னால் வரும் வாகனங்களைக் கண்காணித்து வாகனங்கள் இயக்க ஏதுவாக கண்ணாடிகள் பொருத்தப்படுகின்றன. ஆனால், இருசக்கர வாகனங்களில் இந்தக் கண்ணாடிகள் அகற்றப்படுவதாகவும், அதனால் விபத்துகள் அதிகரிப்பதாகவும் கூறி, திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், தமிழ்நாடு மாநில மோட்டார் வாகன சட்டப்படி, கண்ணாடி இல்லாமல் இருசக்கர வாகனங்கள் இயக்குவோருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.

இந்த வழக்கை இன்று (ஜூலை 15) விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, இருசக்கர வாகனங்களில் கண்ணாடிகள் பொருத்த வேண்டும் என்ற விதியைக் கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என, தமிழக போக்குவரத்துத் துறை ஆணையருக்கு உத்தரவிட்டது.

மேலும், இருசக்கர வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடியை அகற்றினால், வாரண்டி கிடையாது என நுகர்வோரை எச்சரிக்கும்படி, வாகன விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தேவைப்பட்டால் இது சம்பந்தமாக வாரண்டி விதிகளை உருவாக்க வாகன உற்பத்தியாளர்களையும் அறிவுறுத்தலாம் எனத் தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கை முடித்து வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x