Published : 15 Jul 2021 01:46 PM
Last Updated : 15 Jul 2021 01:46 PM

கடுமையாகிறது கரோனா தடுப்பு நடவடிக்கை: பொது இடங்களில் கடும் சோதனை நடத்த சென்னை மாநகராட்சி முடிவு

சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களில் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக விடுமுறை நாட்களில் போலீஸுடன் இணைந்து கடும் சோதனை நடத்த சென்னை மாநகராட்சி முடிவெடுத்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கோவிட் தொற்றுப் பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்க மாநகராட்சி காவல்துறையுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தற்பொழுது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு ஆகிய 2 தினங்களில் வணிக வளாகங்கள் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் வருவதாகப் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மாநகராட்சியின் சார்பில் காவல்துறையுடன் இணைந்து கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இக்குழுவின் மூலம் பாதுகாப்பு வழிமுறைகள் முறையாகப் பின்பற்றுவதை உறுதி செய்ய கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட கடைகள், தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், காய்கறி அங்காடிகள் மற்றும் இதர கடைகள் ஆகியவற்றில் கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் வகையில் அதற்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், அவ்வப்பொழுது கை கழுவும் திரவம் (அ) சோப்புக் கரைசல் கொண்டு கைகளைச் சுத்தம் செய்தல் போன்ற பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். மேலும், 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் உணவகங்கள், வணிக நிறுவனங்கள், அங்காடிகள் செயல்படுகின்றனவா என சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

அங்கு பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை சீரான நிலையில் உள்ளதா எனப் பரிசோதனை செய்ய வேண்டும். பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் மற்றும் கையுறைகளைக் கட்டாயம் அணிய வேண்டும். மேலும், கடைகளின் வாயிலில் டெட்டால் (அ) சானிடைசர்கள் போன்ற கை கழுவும் திரவங்கள் கட்டாயம் இருக்க வேண்டும்.

கடைகளுக்குச் செல்லும் பொழுது பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் டெட்டால் (அ) சானிடைசர்கள் கொண்டு கைகளைச் சுத்தம் செய்த பின்புதான் கடைக்குள் அனுமதிக்க வேண்டும். கண்காணிப்புக் குழுக்களின் ஆய்வின்போது மேற்குறிப்பிட்ட அரசின் பாதுகாப்பு வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படாமலும், பாதுகாப்பு ஏற்பாடுகளின்றி இருப்பதும் தெரியவந்தால் தொற்று நோய்கள் சட்டம் 1897 பிரிவு 2-ன் கீழ் சம்பந்தப்பட்ட கடைகள் மற்றும் வணிக வளாகங்களுக்குக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே, வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான வணிக வளாகங்கள், அங்காடிகள் ஆகியவற்றில் அரசின் நிலையான பாதுகாப்பு வழிமுறைகளைத் தீவிரமாகக் கடைப்பிடிக்க வேண்டும் எனப் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது”.

இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x