Published : 15 Jul 2021 01:32 PM
Last Updated : 15 Jul 2021 01:32 PM

உட்கட்சித் தேர்தல் டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கப்படும் என அதிமுக உறுதி: உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

பிரதிநிதித்துவப் படம்

சென்னை

உட்கட்சித் தேர்தல் வரும் டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கப்படும் என, அதிமுக உறுதி அளித்திருப்பதாக, தேர்தல் ஆணையம் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், "அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அக்கட்சியின் உட்கட்சித் தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை.

கட்சியின் சட்ட திட்டங்களின்படி அனைத்து அடிப்படை உறுப்பினர்கள் வாக்களித்து பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால், தற்போது அதுபோன்று அதிமுகவில் இல்லை. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு உட்கட்சித் தேர்தல் கட்டாயம் நடத்தப்பட வேண்டும்.

அதிமுக சார்பில் 2014-ம் ஆண்டுக்குப் பிறகு உட்கட்சித் தேர்தல் நடத்தி நிர்வாகிகளை நியமிக்கவில்லை. சர்வாதிகாரப் போக்குடன் கட்சியின் தலைமை, நிர்வாகிகளை நியமித்து வருகிறது. இது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் விதிகளுக்கு எதிரானது.

இது தொடர்பாக, இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் பலமுறை புகார் அளித்தும் அந்த புகாருக்கு இதுவரை எந்தவிதமான பதிலும் இல்லை. அதிமுக உட்கட்சித் தேர்தலை நடத்தாமல், நிர்வாகிகள் நியமனத்துக்குத் தடை விதிக்க வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் முன் இன்று (ஜூலை 15) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் இந்த வழக்கில் ஆஜராகி, அதிமுக உட்கட்சித் தேர்தல் நடைபெறாமல் நிர்வாகிகளை நியமிப்பது சட்டவிரோதம் எனவும், இது தொடர்பாகத் தேர்தல் ஆணையத்திடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க மறுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

அப்போது நீதிபதி, இந்த வழக்கில் ஏன் அதிமுகவை எதிர்மனுதாரராகச் சேர்க்கவில்லை எனக் கேள்வி எழுப்பினார்.

இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால், அதிமுகவின் உட்கட்சித் தேர்தலை வருகிற டிசம்பர் மாதத்துக்குள் முடித்து விடுவதாக, அக்கட்சியின் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.

இதனையடுத்து நீதிபதி, இந்த வழக்கில் அதிமுகவையும் எதிர் மனுதாரராகச் சேர்க்க உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளிவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x