இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள 27 மீனவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள 27 மீனவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்
Updated on
1 min read

இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள 27 மீனவர்கள் மற்றும் 71 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமருக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில் முதல்வர் கூறியிருப்பதாவது:

பாரம்பரிய பகுதியில் மீன்பிடித்து வரும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைப்பது துரதிருஷ்டவசைமாக தொடர்கிறது. கடந்த 10-ம் தேதி ராமேசுவரம் மீன்பிடி தளத்தில் இருந்து 2 விசைப்படகுகளில் கடலுக்குச் சென்ற 12 மீனவர்கள், 11-ம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தலைமன்னார் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

பாக் வளைகுடா பகுதியில், தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலை நிறுத்துவதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. ஆனால், அவர்களின் உரிமையை பறிக்கும் விதமாக, இலங்கை கடற்படையினர் தொடர் தாக்குதல், கைது, சிறை பிடித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகள் மூலம் இதை தடுத்து நிறுத்த வேண்டும்.

மேலும், சிறை பிடிக்கப்படும் மீனவர்களை விடுவிக்கும் இலங்கை கடற்படையினர், அவர்களது படகுகள் மற்றும் மீன்பிடி கருவிகளை விடுவிப்பதில்லை என்பதை பலமுறை சுட்டிக் காட்டியுள்ளேன். இதனால், மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து விரக்தி அடைந்துள்ளனர்.

நீண்டகாலமாக படகுகள் அங்கு நிற்பதால், பருவமழையால் பாதிக்கப்பட்டு சேதமடைந்துள்ளன. இவற்றை மத்திய அரசு மீட்டு, சீரமைத்து மீனவர்களுக்கு விரைவில் அளிக்க வேண்டும். தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் உரிய நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டும். மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரத்தில் தாங்கள் நேரடியாக தலையிட வேண்டும். இலங்கை அதிகாரிகளுடன் பேசி, 27 தமிழக மீனவர்கள் மற்றும் 71 படகுகளை விரைவில் மீட்க, இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in