Last Updated : 14 Jul, 2021 09:13 PM

 

Published : 14 Jul 2021 09:13 PM
Last Updated : 14 Jul 2021 09:13 PM

தமிழகம், புதுச்சேரியில் கரோனாவால் உயிரிழந்த வழக்கறிஞர்கள் விவரங்கள் சேகரிப்பு

மதுரை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கரோனாவால் உயிரிழந்த வழக்கறிஞர்களின் விபரங்களை பார் கவுன்சில் சேகரித்து வருகிறது.

தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்கள் மூடப்பட்டன. மாவட்ட நீதிமன்றங்களில் மட்டுமே தற்போது நேரடி விசாரணை நடைபெற்று வருகிறது. உயர் நீதிமன்றங்களில் காணொலி வழியாகவே விசாரணை நடைபெற்று வருகிறது.

கரோனா தொற்றுக்கு ஆளாகி வழக்கறிஞர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். பல வழக்கறிஞர்கள் கரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று திரும்பியுள்ளனர். வழக்கறிஞர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்கவும், கரோனாவால் உயிரிழந்த வழக்கறிஞர்கள் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கவும் வழக்கறிஞர்கள் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கரோனாவால் உயிரிழந்த மற்றும் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய வழக்கறிஞர்களின் விபரங்களை சேகரிக்க தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கும் பார் கவுன்சில் செயலர் சி.ராஜகுமார் கடிதம் அனுப்பியுள்ளார்.

இது குறித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை பார் அசோசியேஷன் பொதுச் செயலர் என்.இளங்கோ கூறியதாவது:

கரோனா தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்த மற்றும் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய வழக்கறிஞர்களின் விபரங்களை சேகரிக்க பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. இதனால் கரோனாவுக்கு உயிரிழந்த வழக்கறிஞர்கள், சிகிச்சை பெற்ற வழக்கறிஞர்களின் விபரங்களை மருத்துவமனை ஆவணங்களுடன் பார் அசோசியேஷனுக்கு விரைவில் அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x