Published : 14 Jul 2021 08:37 PM
Last Updated : 14 Jul 2021 08:37 PM

தூய்மைப்பணியாளர்களுடன் இணைந்து நீதிமன்றத்தில் துப்புரவுப்பணி : தலைமை நீதிபதி அறிவிப்பு 

சென்னை

தூய்மை பணியாளர்களுடன் இணைந்து உயர் நீதிமன்ற வளாகத்தை தூய்மைப்பணியில் ஈடுபடபோவதாக தெரிவித்துள்ள தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தம்முடன் வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்களும் இணைந்து ஒத்துழைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

உயர் நீதிமன்ற வளாகத்தை தூய்மையாகவும், பசுமையாகவும் மாற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என ராஜ்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானார்ஜி, நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பாதுகாப்பின் காரணமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் செயல்படும் மருத்துவமனையை உபயோகப்படுத்த முடியவில்லை என்றும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் பயன்படுத்தும் வகையில் கட்டிடங்கள் இன்னும் மாற்றப்படாத நிலை இருப்பதாகவும் வாதிடப்பட்டது.

மேலும் நீதிமன்ற வளாகத்தை தூய்மையாகவும் பசுமையாக மாற்றி பாதுகாக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அப்போது சென்னை மாநகராட்சி தரப்பில் வளாகம் முழுவதும் தினமும் 19 தூய்மை பணியாளர்கள் பணியில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டது.

அப்போது தலைமை நீதிபதி, நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிலைகள் அழுக்கடைந்து தூய்மைப்படுத்தப்படாமல் இருப்பதை தாம் கவனித்தாகவும், எனவே ஒரு ஞாயிற்றுக் கிழமையன்று தானே நேரடியாக ஒரு வாளி மற்றும் துப்புரவு உபகரணங்களுடன், தூய்மை பணியாளர்களுடன் இணைந்து நீதிமன்றத்தை வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

தன்னுடன் அனைத்து வழக்கறிஞர்களும், நீதிமன்ற பணியாளர்களும் சேர்ந்து முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x