Published : 14 Jul 2021 07:29 PM
Last Updated : 14 Jul 2021 07:29 PM

தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபடுவோர் திருவள்ளுவர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: அரசு அறிவிப்பு

தமிழுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் பாடுபடுவோர் திருவள்ளுவர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்துத் தமிழ் வளர்ச்சி இயக்குநர் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

’’தமிழுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் பாடுபடும் தமிழறிஞர்களைச் சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளை வழங்கிச் சிறப்பித்து வருகிறது. அவ்வகையில் தை மாதம் 2ஆம் நாள் நடைபெறவுள்ள திருவள்ளுவர் திருநாளில் கீழ்க்காணும் விருதுகள் வழங்கப்படவுள்ளன. இவ்விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பப் படிவத்தை தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.com என்ற வலைத்தளத்தில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிப்பவர்கள் தன்விவரக் குறிப்புகளுடன் நிழற்படம் இரண்டு, எழுதிய நூல்களின் பெயர்ப் பட்டியலுடன் அந்நூல்களில் ஒருபடி வீதம் தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ் வளர்ச்சி வளாகம் முதல் தளம், தமிழ்ச் சாலை, எழும்பூர், சென்னை-600 008 என்ற முகவரிக்கு 16.08.2021 ஆம் நாளுக்குள் அனுப்ப வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு: 044-28190412, 044-28190413

மின்னஞ்சல் முகவரி: tamilvalarchithurai@gmail.com

1. திருவள்ளுவர் விருது - 2022 (திருக்குறள் நெறி பரப்புவோருக்கு)

2. மகாகவி பாரதியார் விருது - 2021 (பாரதியாரின் படைப்புகள் அனைத்தையும் முழுமையாகப் பயின்று ஆய்வு மேற்கொண்டு பாரதியாரைப் பற்றிய கவிதைகள் மற்றும் பாரதியின் புகழ் பரப்பும் வகையில் கவிதை, உரைநடை நூல்கள் படைத்தோர், பிற வகையில் தொண்டு செய்தோர், செய்பவர்களுக்கு).

3. பாவேந்தர் பாரதிதாசன் விருது - 2021 (சிறந்த கவிஞருக்கு)

4. தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது - 2021 (சிறந்த தமிழ் எழுத்தாளருக்கு)

5. கி.ஆ.பெ. விசுவநாதம் விருது - 2021 (சிறந்த தமிழ் அறிஞருக்கு)

6. பெருந்தலைவர் காமராசர் விருது - 2021 (தெருவெங்கும் பள்ளிகள் திறந்து, இலவசக் கல்வித்திட்டம், சத்துணவுத் திட்டம் முதலிய திட்டங்கள் மூலமாகத் தமிழ்ச் சமுதாயம், கல்வி எனும் கைவிளக்கு ஏந்தி முன்னேற வழிவகுத்த வரலாறு படைத்த பெருந்தகையாளரின் அடிச்சுவட்டில், தமிழக மக்களுக்குத் தொண்டாற்றி வரும் ஒருவருக்கு)

7. பேரறிஞர் அண்ணா விருது - 2021 (தமிழ்ச் சமுதாயம் முன்னேற்றம் காண அயராது பாடுபடும் ஒருவருக்கு)’’

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x