Published : 14 Jul 2021 07:16 PM
Last Updated : 14 Jul 2021 07:16 PM

குளத்தில் மூழ்கி 3 சிறுமிகள் உட்பட 5 பெண்கள் பலி: முதல்வர் ஸ்டாலின் இரங்கல், நிவாரண உதவி அறிவிப்பு

சென்னை

திருவள்ளூர், கரும்புகுப்பம் கிராமத்தில் குளத்தில் மூழ்கி 3 சிறுமிகள் உட்பட 5 பெண்கள் பலியான விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட இரங்கல் குறிப்பு வருமாறு:

“திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், கரும்புக்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீஅங்காளம்மன் கோயில் குளத்தில் இன்று (14-7-2021) காலை 10-45 மணியளவில் அப்பகுதியைச் சேர்ந்த 5 பேர் துணி துவைத்துக் கொண்டிருந்தபோது, நர்மதா (வயது 11) என்ற சிறுமி திடீரென ஆழமான பகுதிக்குச் சென்றதால், அச்சிறுமியைக் காப்பாற்றுவதற்காகத் சுமதி (வயது 35), ஜோதி (வயது 35), அஸ்விதா (வயது 14), ஜீவிதா (வயது 14) ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக ஆழமான பகுதிக்குச் சென்றபோது, மேற்படி 5 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரச் செய்தியை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.

இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்குத் தலா ஐந்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன்”.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x