Published : 14 Jul 2021 03:13 AM
Last Updated : 14 Jul 2021 03:13 AM

இலங்கை கடற்படையினரால் பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 9 படகுகளை அழிக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவு

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டு பராமரிப்பின்றி சேதமடைந்த தமிழக மீனவர்களின் 9 படகுகளை அழிக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை கடற்படையினரால் கடந்த 5 ஆண்டுகளில் 300-க்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, 1,300-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களும் சிறை பிடிக்கப்பட்டனர். மீனவர்களின் பல்வேறுகட்டப் போராட்டங்களுக்குப் பின்னர் மத்திய,மாநில அரசுகளின் முயற்சிகளினால் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும், படகுகள் விடுவிக்கப்படுவதில்லை.

கடந்த 26.8.2018 அன்று இலங்கை அரசால் நல்லெண்ண அடிப்படையில் பரிந்துரை செய்யப்பட்டு, 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரையிலும் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த 173 படகுகளை விடுவிக்க அந்நாட்டு நீதிமன்றங்கள் உத்தரவிட்டன.

படகுகளை மீட்க குழு அமைப்பு

அப்படகுகளின் நிலையை அறிந்துவர தமிழக மீன்வளத் துறை கூடுதல் இயக்குநர் ஜானி டாம் வர்கீஸ், மீனவப் பிரதிநிதி ஜேசுராஜா தலைமையில் தொழில்நுட்ப வல்லுநர்கள், மீனவர்கள் அடங்கிய குழு இலங்கை சென்றது. அங்கு ஆய்வு செய்ததில் 47 தமிழக விசைப்படகுகள் மட்டுமே மீட்கும் நிலையில் உள்ளதாகவும், மற்ற படகுகள் முற்றிலும் சேதமடைந்து இருப்பதாகவும் அக்குழு அரசுக்கு அறிக்கை அளித்தது.

அதன் அடிப்படையில் 47 படகுகளையும் மீட்டு வர அரசு ஆணை வெளியிட்டு, ரூ.48 லட்சம் நிதி ஒதுக்கியது. இதில் 35 படகுகள் மட்டுமே மீட்டு தமிழகம் கொண்டுவரப்பட்டன. எஞ்சிய 12 படகுகள் இடைப்பட்ட காலத்தில் சேதமடைந்ததால் கொண்டு வரப்படவில்லை.

மேலும் மீட்கப்படாமல் இருந்த படகுகள் இலங்கையில் மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகியமாவட்ட மீன்பிடி இறங்குதளங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த மீன்பிடி இறங்குதளங்களை பயன்படுத்தி வந்த இலங்கை மீனவர்கள் தங்கள் படகுகளை நிறுத்துவதற்கு இடம் இல்லாமல், தமிழக மீனவர்களின் படகுகள் ஆண்டுக்கணக்காக ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளதால் கடற்கரை மாசடைவதுடன் இலங்கை மீனவர்களின் தொழில் பாதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது.

இதுதொடர்பாக இலங்கை மீன்வளத் துறையினரால் மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் முழுமையாக சேதமடைந்துள்ள படகுகளை அழிப்பதற்கு மன்னார் நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டது. இதில் 9 படகுகளை அழிப்பதற்கு நீதிபதி சிவகுமார் அனுமதி வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x