Published : 14 Jul 2021 03:13 AM
Last Updated : 14 Jul 2021 03:13 AM

மாற்றுத் திறனாளி சிறுவனுக்கு கிடைத்த உதவித்தொகை

உடுமலை அருகே சுண்டாக்காம்பாளையம் வடபூதிநத்தம் கிராமத்தில் வசித்து வருபவர் ரம்யா. இவர், தனது மாற்றுத்திறனாளி மகன் யுவன் சக்கரவர்த்தி (12) என்பவருடன், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து, தன் மகனுக்கு உதவித்தொகை கேட்டு கண்ணீர் மல்க மனு அளித்திருந்தார்.

அப்போது, கரோனா தொற்றின் காரணமாக, கல் உடைக்கும் தொழில் செய்து வந்த கணவருக்கு வேலையில்லை எனவும், இதனால் குடும்பம் வறுமையில் தவிப்பதாகவும், மூன்று ஆண்டுகளாக மனு கொடுத்தும் மாற்றுத்திறனாளி மகனுக்கு உதவித்தொகை கிடைக்கவில்லை எனவும் கண்ணீர் மல்க ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக ‘மாற்றுத்திறனாளி மகனுக்கு உதவித்தொகை கிடைக்குமா? அதிகாரிகள் அலைக்கழிப்பதால், பெற்றோர் வேதனை’ எனும் தலைப்பில், நேற்று ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் செய்தி வெளியானது.

இதனைத் தொடர்ந்து, யுவன் சக்கரவரத்தி குடும்பத்தை கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் ஆகியோர் நேற்று உடனடியாக தொடர்பு கொண்டு, விவரங்களை சேகரித்து, வட்டாட்சியர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து தொடர்புடைய மாற்றுத்திறனாளி குடும்பத்தின் வங்கிக்கணக்குக்கு, கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கப்படாத உதவித்தொகை நேற்று உடனடியாக வழங்கப்பட்டதாக, சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x