

ஆக்சிஜன் பற்றாக்குறையைத் தடுக்க ஒவ்வொருவரும் தங்களது பிறந்த நாளன்று மரக்கன்று நட வேண்டும் என வனத்துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நீலகிரி மாவட்டம், உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நேற்று நடந்த விழாவில், வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத் துறையின் சார்பில், 158 பயனாளிகளுக்கு ரூ.76.76 லட்சம் மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளையும், ஊராட்சியில் பணியாற்றும் 676 முன்களப்பணியாளர்களுக்கு மாவட்ட ஊராட்சி நிதியின் மூலம் தலா ரூ.1,500 வீதம் ரூ.10.14 லட்சம் மதிப்பில் ஊக்கத்தொகை, ரூ.22.69 லட்சம் மதிப்பில் கரோனா பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கினார்.
அதன்பின்பு செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: ‘தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பு 1,30,006 சதுர கிலோ மீட்டர். தற்போதுள்ள 23.8 சதவீத காடுகளை 33 சதவீத காடுகளாக மாற்றுவதாக இருந்தால் ஒரு வருடத்துக்கு சராசரியாக 28 கோடி முதல் 30 கோடி மரங்கள் நடவு செய்ய வேண்டும். மரம் நடுவதன் மூலம் ஆக்சிஜன் பற்றாக்குறை தவிர்க்கப்படும். தேவையான ஆக்சிஜன் கிடைப்பதன் மூலம் எந்த நோயும் நம்மை பாதிக்காது. எனவே ஒவ்வொருவரும் தங்களது பிறந்த நாளன்று ஒரு மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.