பதவிக் காலம் முடிந்தும் மாநகராட்சி இடத்தை ஒப்படைக்காத அதிமுக முன்னாள் எம்.பி.: உடனடியாக காலி செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

பதவிக் காலம் முடிந்தும் மாநகராட்சி இடத்தை ஒப்படைக்காத அதிமுக முன்னாள் எம்.பி.: உடனடியாக காலி செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

எம்.பி. அலுவலகத்துக்காக ஒதுக்கப்பட்ட மாநகராட்சி கட்டிடத்தை உடனடியாக காலி செய்ய வேண்டும் என மதுரை அதிமுக முன்னாள் எம்.பி.க்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

மதுரை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தபோது, தல்லாகுளத்தில் உள்ள மாநகராட்சி கட்டிடத்தில் எம்.பி. அலுவலகம் செயல்பட்டது. எம்.பி. பதவி காலம் முடிந்த பிறகும் அந்த அலுவலகத்தை வாடகை அடிப்படையில் பயன்படுத்தி வந்தேன்.
சட்டப்பேரவைத் தேர்தலில் மதுரை கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டேன்.
அப்போது மதுரை தல்லாகுளம் போலீஸார் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் எனது அலுவலகத்தில் சோதனை நடத்தினர். பின்னர் தேர்தல் நடத்தை விதிப்படி மாநகராட்சி கட்டிடத்தை கட்சி அலுவலகமாக பயன்படுத்தக்கூடாது என்று கூறி அலுவலகத்தை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தேர்தல் நடைமுறைகள் முடிந்து பல மாதங்களாகியும் அலுவலகத்தை திறக்க அனுமதி வழங்கவில்லை. எனவே, எனது அலுவலகத்தை திறக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மாநகராட்சி வழக்கறிஞர் வாதிடுகையில், மனுதாரர் எம்.பி.யாக இருந்த போது எம்.பி. அலுவலகத்துக்காக அந்த கட்டிடம் மனுதாரருக்கு ஒதுக்கப்பட்டது. எம்.பி. பதவிக் காலம் முடிந்து 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் அந்த கட்டிடத்தை மனுதாரர் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் என்றார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

மனுதாரர் தற்போது எந்தப்பதவியிலும் இல்லை. நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள் யாராக இருந்தாலும் பதவிக் காலம் முடிந்ததும் அரசுக்கு சொந்தமான இடங்களை காலி செய்ய வேண்டும். ஆனால் மனுதாரர் பதவியை தவறாக பயன்படுத்தி மாநகராட்சி கட்டிடத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். பொறுப்பான பதவியில் இருந்தவர்கள் இவ்வாறு செயல்படலாமா?
.
எனவே, மனுதாரர் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தை உடனடியாக காலி செய்ய வேண்டும். வாடகை பாக்கியை மனுதாரரிடம் மாநகராட்சி அதிகாரிகள் முழுமையாக வசூலிக்க வேண்டும். அந்தக் கட்டிடத்தில் மனுதாரருக்கு சொந்தமான பொருட்கள் இருந்தால் அவற்றை எடுத்துச் செல்வதற்கு அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in