பாடப் புத்தகங்கள், நோட்டுகள், பைகளில் அரசியல் தலைவர்கள் படம் பொறிக்கத் தடை விதிக்க வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் வழக்கு

பாடப் புத்தகங்கள், நோட்டுகள், பைகளில் அரசியல் தலைவர்கள் படம் பொறிக்கத் தடை விதிக்க வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் வழக்கு
Updated on
1 min read

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் பாடப் புத்தகங்கள், நோட்டுகள், பைகள், எழுதுபொருட்கள் உள்ளிட்டவற்றில் அரசியல் கட்சித் தலைவர்களின் படங்களை அச்சிடத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்குத் தமிழக அரசு வழங்கிவரும் பாடப்புத்தகம், எழுதுபொருள், புத்தகப்பை, சைக்கிள் ஆகியவற்றில் கடந்த அதிமுக ஆட்சியின்போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதா, முதல்வராக இருந்த பழனிசாமி ஆகியோரது புகைப்படங்கள் அச்சிடப்பட்டிருந்தன. ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால், அவற்றைக் கிடப்பில் போடாமல், மாணவர்களுக்குத் தொடர்ந்து வழங்கக் கோரி நமது திராவிட இயக்கம் என்ற அமைப்பின் தலைவர் ஓவியம் ராஜன் என்பவர் பொதுநல வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “முந்தைய ஆட்சியினரின் புகைப்படங்கள் அச்சிடப்பட்டு இருப்பதனால், அவற்றை விநியோகிக்க வேண்டாம் என்று பள்ளிக் கல்வித்துறை வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது, அரசுகளுக்கு இடையேயான கவுரவப் பிரச்சினையால் பொதுமக்களுடைய வரிப் பணத்தை வீணடிக்கக் கூடாது.

எனவே, ஏற்கெனவே அச்சிடப்பட்டவற்றைத் தேக்கிவைக்காமல் மாணவர்களுக்கு விநியோகிக்க உத்தரவிட வேண்டும். மேலும், பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லாப் பொருட்களில் அரசியல் கட்சித் தலைவர்களின் படங்களை அச்சிடத் தடை விதிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டதை அடுத்து, வழக்கு விசாரணை நான்கு வாரங்களுக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in