நீட் தேர்வு விவகாரத்தில் குழப்பம்; 7.5% இடம் கிடைக்க மாணவர்களுக்கு உடனடியாகப் பயிற்சி அளியுங்கள்: எடப்பாடி பழனிசாமி

நீட் தேர்வு விவகாரத்தில் குழப்பம்; 7.5% இடம் கிடைக்க மாணவர்களுக்கு உடனடியாகப் பயிற்சி அளியுங்கள்: எடப்பாடி பழனிசாமி
Updated on
1 min read

நீட் தேர்வு ரத்து குறித்த அரசின் குழப்பத்தால், நீட் தேர்வு உண்டா, இல்லையா என்கிற என் கேள்விக்கும் பதில் சொல்லாமல் அரசு காலந்தாழ்த்திய நிலையில் நீட் தேர்வுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இனியாவது 7.5% ஒதுக்கீட்டிலாவது மாணவர்கள் இடம்பெற அவர்களுக்கு உரிய பயிற்சி அளியுங்கள் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்த நிலையில், திமுக ஆட்சியைப் பிடித்தது. பின் நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆராய ஏ.கே.ராஜன் தலைமையில் கமிட்டி அமைத்தது. நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று அறிவித்துவிட்டு தற்போது கமிட்டி போடுவதால் நீட் தேர்வுக்குத் தயாராவதா? இல்லையா? என மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது என ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் குற்றம் சாட்டியிருந்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், திமுக எந்தக் காலத்திலும் நுழைவுத் தேர்வை ஏற்றுக்கொள்ளாது. நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆராய கமிட்டி போடப்பட்டுள்ளது. அது தரும் அறிக்கையின் அடிப்படையில் தமிழக முதல்வர் உரிய சட்டத்தீர்வு மூலம் நடவடிக்கை எடுப்பார். அதுவரை நீட் தேர்வு நிலை தொடரும், ஆகவே, இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நீட் தேர்வுத் தேதி செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு தமிழக அரசே காரணம் என்றும், 7.5% உள் ஒதுக்கீட்டில் மாணவர்கள் இடம் பெற உரிய நடவடிக்கையாவது தமிழக அரசு எடுக்கவேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெறுமா?" என முதல்வரை நேரடியாகவும், ஊடகங்கள் மூலமும் பலமுறை வலியுறுத்தியும் பதில் சொல்லாமல் காலம் தாழ்த்தியதின் விளைவு; இன்று மாணவர்களின் மருத்துவக் கனவு கேள்விக்குறியாகி உள்ளது.

எப்போதும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத இந்த அரசு, எங்கள் அரசு செயல்படுத்திய "நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5% இட ஒதுக்கீடு கிடைக்கப் பெறுவதில் இடையூறு ஏற்படுத்தாமல், தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு எங்கள் அரசு அளித்ததுபோல உரிய பயிற்சிகள் வழங்கி உறுதுணையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்”.

இவ்வாறு இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in