Published : 13 Jul 2021 03:13 AM
Last Updated : 13 Jul 2021 03:13 AM

படகு பழுதாகி தவித்த 7 மீனவர்கள் மீட்பு: கடலோர காவல் படையினர் துரித நடவடிக்கை

தூத்துக்குடி அருகே நடுக்கடலில் படகு இயந்திரம் பழுதாகி தத்தளித்த மீனவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட கடலோர காவல் படையினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே படகு இயந்திரம் பழுதாகி நடுக்கடலில் தத்தளித்த 7 மீனவர்களை இந்திய கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டனர்.

தூத்துக்குடி அருகே உள்ள தருவைக்குளத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள் ஒரு படகில் நேற்று முன்தினம் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். தூத்துக்குடியில் இருந்து தென் கிழக்கே 55 கடல்மைல் தொலைவில் படகு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால், அவர்களால் தொடர்ந்து செல்ல முடியாமல் நடுக்கடலில் தவித்தனர். தூத்துக்குடியில் உள்ள மீன்வளத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்திய கடலோர காவல் படையினர், `அபிராஜ்’ என்ற ரோந்து கப்பலில் உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்து சென்று நடுக்கடலில் தத்தளித்த 7 மீனவர்களையும் மீட்டு, அவர்களது படகையும் கயிறு கட்டி கரைக்கு இழுத்து வந்தனர். பின்னர் படகையும், மீனவர்களையும் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட 7 மீனவர்களும் முதலுதவி சிகிச்சைக்கு பின்புவீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தங்களை பத்திரமாக மீட்ட கடலோர காவல் படையினருக்கு மீனவர்கள் நன்றி தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x