Published : 13 Jul 2021 03:13 AM
Last Updated : 13 Jul 2021 03:13 AM

மாற்றுத்திறனாளி மகனுக்கு உதவித்தொகை கிடைக்குமா? - அதிகாரிகள் அலைக்கழிப்பதால் பெற்றோர் வேதனை

உடுமலை அருகே சுண்டக்காம்பாளையம் வடபூதிநத்தம் கிராமத்தில் வசிப்பவர் ரம்யா. இவர், தனது மாற்றுத்திறனாளி மகன் யுவன் சக்கரவர்த்தி (12) என்பவருடன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து, தன் மகனுக்கு உதவித்தொகை கேட்டு கண்ணீர் மல்க மனு அளித்தார்.

அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எனது கணவர் சிவமுருகன், கல் உடைக்கும் கூலித் தொழிலாளி. எங்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மூத்த மகன் யுவன் சக்கரவர்த்திக்கு சிறு வயது முதலே காது கேட்கும் திறனற்றும், வாய் பேசாத முடியாத நிலையிலும் உள்ளார். கரோனா தொற்றால் கணவருக்கும் வருமானம் இல்லாததால், வறுமையில் உள்ளோம். கடந்த 2017-ம் ஆண்டுமுதல் என் மகனுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்து வருகிறேன்.

அதேபோல இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ், உதவித்தொகை வழங்க கடந்த 2017-ம் ஆண்டு டிச. 29-ம் தேதி சமூக பாதுகாப்புத்திட்ட வட்டாட்சியர் உத்தரவிட்டும், இதுவரை எங்களுக்கு பலன் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக பலமுறை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும், எந்த பயனும் இல்லை. மகனின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, சிறப்பு பள்ளியில் சேர்த்து கல்வி வாய்ப்பை வழங்கவும், உதவித்தொகை பெறவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் ஜெயபிரகாஷ், ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது ‘‘தொடர்புடைய நபரின் உடல் உறுப்பு பாதிப்பின் அளவு 75 சதவீதத்துக்கும் குறைவாக இருப்பதால், அவருக்கு உதவித்தொகை வழங்க வட்டாட்சியர் அலுவலகத்தில்தான் உத்தரவிட முடியும். யுவன் சக்கரவர்த்திக்கு, சமூக பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் உதவித்தொகை வழங்க உத்தரவிட்டுள்ளதால், அவர்களிடம்தான் இது தொடர்பாக கேட்க முடியும்’’ என்றார். திருப்பூர் மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட அதிகாரிகள் கூறும்போது ‘‘உடுமலைப்பேட்டை வட்டத்தில் உள்ள அதிகாரிகளுடன் பேசியுள்ளோம். விரைவில், கூலித் தொழிலாளி குடும்பத்தின் பிரச்சினை களையப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x