Published : 13 Jul 2021 03:16 AM
Last Updated : 13 Jul 2021 03:16 AM

வியாபாரிகள் போராட்டம் எதிரொலி நேதாஜி மார்க்கெட்டில் மொத்த காய்கறி வியாபாரத்துக்கு அனுமதி: வேலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த கூட்டத்தில் சுமூக முடிவு

வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் வியாபாரம் செய்ய அனுமதி வழங்கக்கோரி காய்கறி மொத்த வியாபாரிகள் நேற்று வியாபாரத்தில் ஈடுபடாமல் போராட் டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, நேதாஜி மார்க்கெட்டில் மொத்த வியாபாரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் கரோனா இரண்டாம் அலை பரவல் தாக்கத் தால் நேதாஜி மார்க்கெட்டில் இயங்கிவந்த காய்கறி மொத்த வியாபாரம், சில்லறை வியாபாரம், பூ மார்க்கெட், மளிகை கடைகள்,மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட 650-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட் டன. மேலும், மாங்காய் மண்டி அருகில் உள்ள மைதானத்தில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு காய்கறி மொத்த வியாபாரமும், பழைய மீன் மார்க்கெட் வளாகத்தில் சில்லறை காய்கறி வியாபாரமும் நடைபெற்றது. ஊரடங்கு தளர்வில் நேதாஜி மார்க்கெட்டில் பிற கடைகள் திறக்கப்பட்ட நிலையில் காய்கறி மொத்த வியாபாரத்துக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படவில்லை.

வேலூர் மாவட்டத்தில் கரோனா பரவல் குறைந்து வருவதால் நேதாஜி மார்க்கெட்டில் காய்கறி மொத்த வியாபாரத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. தற்காலிக மார்க்கெட்டில் தங்களுக்கு போதுமான வசதிகள் இல்லததால் அனுமதிக்க வேண்டும் என வியாபாரிகள் கோரினர். ஆனால், மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க மறுத்துவிட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வேலூர் காய்கறி மொத்த வியாபாரிகள் தற்காலிக மார்க் கெட்டில் நேற்று வியாபாரத்தில் ஈடுபடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், நேதாஜி மார்க்கெட்டில் மொத்த காய்கறி வியாபாரத்துக்கு எப்போது அனுமதி அளிக்கப்படுகிறதோ அன்று முதல் வியாபாரத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர். வியாபாரிகளின் திடீர் போராட்டத்தால் கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வேலூர் நேதாஜி மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து தடைபட்டது. இதனால், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தி.மலை மாவட்டங் களுக்கான காய்கறி விநியோகமும் பாதிக்கப் பட்டது. காய்கறிகள் விலை உயரும் நிலை ஏற்பட்டது.

சுமூக பேச்சுவார்த்தை

வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து வணிகர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில், மாநகராட்சி ஆணையர் சங்கரன், பொறியாளர் கண்ணன், வேலூர் வணிகர் சங்கங் களின் பேரமைப்பின் மாவட்டத் தலைவர் ஞானவேலு, காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் பாலுஉள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்ற னர்.

அப்போது, நேதாஜி மார்க்கெட் மொத்த காய்கறி வியாபாரம் அதிகாலை 1 மணி முதல் காலை 9 மணி வரை செயல்படலாம் என்றும் சில்லறை காய்கறி வியாபாரம் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பழைய மீன் மார்க்கெட் வளாகத்தில் செயல்படலாம் என முடிவு செய்யப்பட்டது. இதனை, வரவேற்ற வியாபாரிகள் தங்களது போராட்டத்தை திரும்பப் பெற்றுள்ளனர்.

நேதாஜி மார்க்கெட்டில் இன்று முதல் மொத்த காய்கறி வியாபாரம் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x