

தமிழக அரசின் ஆட்சேபனையை மீறி மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் எனக் கர்நாடக உள்துறை அமைச்சர் பேட்டி அளித்ததற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கர்நாடகாவைக் கண்டிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேகதாது அணை பிரச்சினை குறித்து தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியது. இதில் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் கர்நாடக அரசைக் கண்டித்தும், மேகதாது அணை பிரச்சினையில் ஒன்றுபட்டு நிற்பது எனவும், அனைத்துக் கட்சித் தீர்மானத்தை ஒன்றாகச் சென்று மத்திய அரசிடம் அளிப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்து பேட்டி அளித்த கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, “பிரச்சினைகளைக் காவிரி தீர்ப்பாயம் முடித்துவைத்த நிலையில், அணை கட்டும் முடிவில் மாற்றமில்லை. சட்டரீதியாக கர்நாடக அரசின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்கும் என நம்புகிறோம்.
மேகதாது பிரச்சினை குறித்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. ஆனால், உச்ச நீதிமன்றம் எந்தத் தடையும் விதிக்கவில்லை'' எனப் பேட்டி அளித்துள்ளார்.
இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். கர்நாடகாவை மத்திய அரசு கண்டிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அவரது ட்விட்டர் பதிவு:
''தமிழக அரசு எதிர்த்தாலும் மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியிருக்கிறார். இரு மாநில உறவுகளைச் சீர்குலைக்கும் வகையிலான கர்நாடக அமைச்சரின் இந்தக் கருத்து கண்டிக்கத்தக்கது ஆகும்.
மேகதாது அணையைக் கட்டக்கூடாது என்று தமிழகத்தின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் ஒப்புதலின்றி அணை கட்ட அனுமதி வழங்கப்படாது என்று மத்திய அரசு கூறிவிட்டது. அதன் பிறகும் கர்நாடகம் பிடிவாதம் பிடிப்பது நியாயமல்ல.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு உள்ளிட்ட எதையும் மதிக்காமல் மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்று கர்நாடக அமைச்சர் பொம்மை தொடர்ந்து பேசி வருவது, அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மாநிலங்களிடையேயான உறவு தத்துவத்திற்கு எதிரானது.
அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான கர்நாடக அமைச்சர்களின் பேச்சுகளை மத்திய அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது. கர்நாடக அரசை மத்திய அரசு கண்டிப்பதுடன், அரசியலமைப்புச் சட்டத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”
இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.