Published : 12 Jul 2021 03:37 PM
Last Updated : 12 Jul 2021 03:37 PM

ரூ.1330 கோடி மின்வாரிய நிலக்கரி டெண்டர் திரும்பப் பெறப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

1,330 கோடி ரூபாய் மதிப்பிலான நிலக்கரி கொள்முதல் செய்வதற்கான டெண்டர் திரும்பப் பெறப்பட்டதாக டான்ஜெட்கோ தெரிவித்ததையடுத்து, அதற்கு தடை கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தமிழகத்தில் மின் வாரியத்திற்கு 1,330 கோடி ரூபாய் மதிப்பில் வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ய டெண்டர் அறிவிக்கப்பட்டது. இந்த டெண்டரில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதால் ஊழலை தடுக்க வருவாய் புலனாய்வு இயக்குனரகம் தலைவர், மத்திய ஊழல் தடுப்பு ஆணையர், லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் ஆகியோர் அடங்கிய கூட்டு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என மின் வாரிய முன்னாள் பொறியாளர் செல்வராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, இந்தோனேஷியாவில் இருந்து அதிகவிலைக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட உள்ளதாக கூறி, மனுதாரர் தரப்பில் ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டது. மேலும், டெண்டருக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார்.

டான்ஜெட்கோ தரப்பில், மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்கள் 2012 முதல் 2016 வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்தவை எனவும், அந்த டெண்டர் திரும்பப் பெறப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, நிலக்கரி இறக்குமதி தொடர்பாக வெளியிடப்பட்ட இந்த டெண்டர் திரும்பப்பெறப்பட்டுள்ளதாக டான்ஜெட்கோ தரப்பில் தெரிவிக்கப்பட்டதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு செல்லத்தக்கதல்ல எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x