Published : 12 Jul 2021 09:46 AM
Last Updated : 12 Jul 2021 09:46 AM

கரோனா விதிமீறல்: சென்னையில் ஒருநாளில் ரூ.2 லட்சத்துக்கு மேல் அபராதம் வசூல்

பிரதிநிதித்துவப் படம்

சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வணிக வளாகப் பகுதிகளில் அரசின் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகளில் நேற்று மட்டும் ரூ.2,09,300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி நேற்று (ஜூலை 11) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கோவிட் தொற்று பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க மாநகராட்சி காவல்துறையுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

தற்போது ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிறு ஆகிய 2 தினங்களில், வணிக வளாகங்கள் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் வருவதாக பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், மாநகராட்சியின் சார்பில் காவல் துறையுடன் இணைந்து கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு அரசின் பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா என்று கண்காணிக்கப்பட்டது.

அதனடிப்படையில், ராயபுரம் மண்டலத்துக்கு 2 குழுக்கள், அம்பத்தூர் மண்டலத்துக்கு 2 குழுக்கள், அண்ணாநகர் மண்டலத்துக்கு 2 குழுக்கள் மற்றும் கோடம்பாக்கம் மண்டலத்துக்கு 3 குழுக்கள் என, 9 சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் காவல்துறை உதவியுடன் வணிக வளாகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில், புரசைவாக்கம், தியாகராய நகர், ராயபுரம் மற்றும் பாடி ஆகிய பகுதிகளில் கரோனா பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 64 கடைகளில் நேற்று (ஜுலை 11) மாலை 7 மணி அளவில் ரூபாய் 1,42,900 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகர் முழுவதும் நேற்று ஒரு நாள் மட்டும் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத வணிக வளாகங்கள் அங்காடிகள் மற்றும் தனி நபர்களிடம் இருந்து மொத்தம் ரூபாய் 2,09,300 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிறு ஆகிய 2 தினங்களில் நேற்று முன்தினம் (ஜூலை 10) மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில், ரூ.3,33,800 அபராதமும், நேற்று மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் ரூ.2,09,300 அபராதம் என, இரண்டு நாட்களில் மொத்தம் ரூ.5,43,100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மே மாதம் 2021 முதல் 09.07.2021 வரை கரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 6,130 நிறுவனங்களிடமிருந்தும் மற்றும் 30,755 தனிநபர்களிடமிருந்து ரூ.3,26,73,090 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. திருமணம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பதிவு செய்யப்பட்ட 1,626 மண்டபங்கள் மற்றும் உணவகங்களில் மாநகராட்சி வருவாய்துறை அலுவலர்களால் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 40 இடங்களில் விதிமீறல் கண்டறியப்பட்டு இதுவரை ரூ.1,72,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, வணிக நிறுவனங்கள், வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகள் அரசின் நிலையான பாதுகாப்பு வழிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது".

இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x