Published : 12 Jul 2021 03:13 AM
Last Updated : 12 Jul 2021 03:13 AM
“கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் தொழில்நுட்ப பூங்கா அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
மார்த்தாண்டத்தில் கரோனா கால சிறப்பு வட்டியில்லா கடன் திட்டம், முன்களப் பணியாளர்களுக்கு உதவி திட்டம், வணிகர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
வட்டியில்லா கடன் திட்டங்களை தொடங்கி வைத்து அமைச்சர் மனோ தங்கராஜ் பேசும்போது, “ மார்த்தாண்டம் தொழில் வர்த்தக சங்கம் சார்பில் கரோனா காலத்தில் அனைத்து வர்த்தகர்களுக்கும் நிவாரண நிதியாக தலா ரூ.5 ஆயிரம் வழங்கியிருப்பது மிகவும் பெருமைக்குரியது. தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மார்த்தாண்டத்தில் தொழில்நுட்ப பூங்கா தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை நிறைவேற்றுவோம்” என்றார்.
விஜய் வசந்த் எம்.பி., விஜயதரணி எம்எல்ஏ, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தூத்துக்குடியில் டைடல் பார்க்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழில் துறை வளர்ச்சி குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தலைமை வகித்தார்.
கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் பங்கேற்றனர்.
அமைச்சர் தங்கம் தென்னரசு பேசும்போது, “ விளாத்திகுளத்தில் ஜவுளி பூங்கா உருவாக்க முயற்சி செய்து வருகிறோம். தூத்துக்குடியை தொழில் வளர்ச்சி மிகுந்த மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடியில் மினி டைடல் பார்க் அமைக்க சாத்தியக்கூறுகள் உள்ளன. சென்னை, கோவைக்கு அடுத்து தூத்துக்குடியில் டைடல் பார்க் அமைக்கப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT