கரோனா தடுப்பூசி போடுவதற்கு முன்பதிவு செய்யும் முறை சென்னையில் மீண்டும் தொடக்கம்

கரோனா தடுப்பூசி போடுவதற்கு முன்பதிவு செய்யும் முறை சென்னையில் மீண்டும் தொடக்கம்
Updated on
1 min read

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்பதிவு செய்யும் முறை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பூசி மருந்துகள் கையிருப்பு இல்லாததால் கடந்த வாரம் பெரும்பாலான நாட்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்படவில்லை.

தடுப்பூசி போட்டுக்கொள்ள gccvaccine.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்துக்கொள்ளும் சேவையும் நிறுத்தப்பட்டது. சென்னையில் கடந்த 10-ம் தேதி நிலவரப்படி 26 லட்சத்து 77 ஆயிரத்து 938 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு சுகாதாரத் துறை சார்பில் சென்னை மாநகராட்சிக்கு சுமார் 45 ஆயிரம் டோஸ் தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து இன்று முகாம் நடைபெறும் என மாநகராட்சி அறிவித்துள்ளது. இணையதளம் வழியாக தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான முன்பதிவும் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு மையத்துக்கு ஒதுக்கப்படும் மொத்த தடுப்பூசி மருந்துகளில் 3-ல் ஒரு பங்குக்கு மட்டுமே இணையதள முன்பதிவு அனுமதிக்கப்படும். மீதமுள்ள 2 பங்கு தடுப்பூசிகள் நேரில் வருவோருக்கு போடப்படும் என்றும் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in