Published : 12 Jul 2021 03:14 AM
Last Updated : 12 Jul 2021 03:14 AM

வயது வரம்பை தளர்த்தி காவலர் தேர்வை உடனே நடத்த வேண்டும்: புதுச்சேரி முதல்வரிடம் திமுக எம்எல்ஏக்கள் மனு

புதுச்சேரி

வயது வரம்பை தளர்த்தி, புதுச்சேரியில் காவலர் தேர்வை உடனே நடத்த வலியுறுத்தி எதிர்க் கட்சி தலைவர் சிவா தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்ப தாவது:

புதுச்சேரியில் கடந்த பல ஆண்டுகளாக அரசுத் துறைகளில் ஆட்கள் தேர்வு செய்யப்படவில்லை. புதுச்சேரியில் செயல்பட்டு வந்த பல்வேறு தனியார் தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டதாலும், இடம் பெயர்ந்து சென்று விட்டதாலும் இளைஞர்களால் வேலை வாய்ப்பை பெற்றுக் கொள்ள முடியவில்லை.

இதனால் புதுச்சேரியில் 50 சதவீதத்துக்கும் மேலான இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி உள்ளனர். குறிப்பாக அரசுத் துறைகளில் மட்டும் சுமார் 10 ஆயிரம் காலிப்பணியிடங்கள் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக நிரப்பப்படாமல் உள்ளது.

காவல்துறையில் மட்டும் சுமார் ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதேசமயம் புதுச்சேரி காவல்துறையில் போலீஸாரின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே மிகுந்த பணிச்சுமையுடன் போலீஸார் பணிபுரிந்து வருகின்றனர். ஆனாலும் கரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதில் போலீஸாரின் பணி மிகவும் முக்கியமானதாக உள்ளது. இப்பணியின்போது 100க்கும் மேற்பட்ட போலீஸார் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். சிலர் இறந்தும் உள்ளனர். இதனால் போலீஸாரின் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இவைகளால் புதுச்சேரியில் குற்றங்கள் அதிகரித்து வருகிறது.

கடந்த காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியில் காவலர் பணியிடங்களை நிரப்ப முயற்சித்த போதும் அப்போதைய துணை நிலை ஆளுநர் கிரண்பேடி முட்டுக்கட்டையாக இருந்ததால் நிரப்ப முடியவில்லை. கரோனா தொற்று காலத்திலும் காவலர் தேர்வுக்காக இளையோர் இடைவிடாது உடற்தகுதிக்கான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் பயிற்சியால் அவர்கள் களைத்து, சோர்ந்து போய் உள்ளனர்.

தொடர்ந்து பல ஆண்டுகளாக காவலர் பணி தேர்வு நடத்தப்படாததால், பல இளைஞர்கள், இளம்பெண்கள் காவலர் தேர்விற்கான வயதை கடந்து விட்டனர். எனவே வயதின் காரணமாக நடைபெற இருக்கும் காவலர் தேர்வில் நாம் புறக்கணிக்கப்பட்டு விடுவோமோ? என்ற அச்சத்திற்கும் ஆளாகியுள்ளனர். காவலர் பணி மட்டுமே தங்களது எதிர்காலம் என நினைத்து இருக்கும் இளைஞர்கள் காவலர் தேர்விற்கான வயதை கடந்து இருக்க மாட்டார்கள்.

எனவே கடந்த 5 ஆண்டுகளுக் கும் மேலாக காவலர் தேர்வு நடத்தாததை கருத்தில் கொண்டு, அவர்களும் பங்கேற்கும் வகையில் வயது வரம்பில் தளர்வு அளித்து காவலர் தேர்வை உடனடியாக நடத்த வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x