Last Updated : 11 Jul, 2021 07:02 PM

 

Published : 11 Jul 2021 07:02 PM
Last Updated : 11 Jul 2021 07:02 PM

பேருந்தின் உள்ளேயே பயணிகளுக்கு கரோனா பரிசோதனை; தனிமனித இடைவெளியின்றி பயணித்ததால் சேலத்தில் நடவடிக்கை

பேருந்துக்குள்ளேயே பயணிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. படம் எஸ். குரு பிரசாத்

சேலம்

சேலத்தில் அதிக எண்ணிக்கையில் பயணிகளுடன் வந்த பேருந்துகளை நிறுத்தி, பேருந்தின் உள்ளேயே பயணிகளுக்கு சுகாதாரத் துறையினர் கரோனா பரிசோதனை மேற்கொண்டு, தனிமனித இடைவெளியுடன் பயணிக்குமாறு அவர்களை அறிவுறுத்தினர்.

சேலம் மாவட்டத்தில் கடந்த மாதத்தில், கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,500 வரை இருந்தது. தற்போது தொற்றுப் பரவல் குறைந்து, ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை 200-க்கும் கீழ் சரிவடைந்துள்ளது.

எனினும், தொற்றுப் பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்த மக்கள், பொது இடங்களில் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல், பேருந்துகளில் 50 சதவீத பயணிகளுடன் இயக்குதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், சேலத்தில் இயக்கப்பட்டு வரும் அரசுப் பேருந்துகளில் பயணிகள் தனிமனித இடைவெளியை அலட்சியப்படுத்தி, பயணிகள் அதிகமானோர் பயணிப்பது தொடர்கிறது. இதனைத் தடுப்பதற்கு, மாநகராட்சி சுகாதாரத் துறையினர், பேருந்துகளை கண்காணித்து வருகின்றனர்.

சேலத்தை அடுத்த இளம்பிள்ளையில் இருந்து, அரசுப் பேருந்து ஒன்று இன்று (ஜூலை 11) காலை சேலம் ஆட்சியர் அலுவலக பேருந்து நிறுத்தத்துக்கு வந்தது. அதில், பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
இதனைக் கவனித்த மாநகராட்சி சுகாதாரத் துறையினர், போலீஸார் உதவியுடன், பயணிகளுக்கு கரோனா தொற்று கண்டறிவதற்கான பரிசோதனையை மேற்கொண்டனர்.

மேலும், பேருந்துகளில் முகக்கவசம் அணியாமல் வந்தவர்கள், தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் வந்தவர்களுக்கும் அபராதமும் விதித்தனர். மேலும், பேருந்து ஓட்டுநர், நடத்துநர் ஆகியோருக்கும் அறிவுரை வழங்கினர்.

இதனிடையே, "சேலத்துக்கு பல்வேறு கிராமங்கள், நகரங்களில் இருந்து வரும் பேருந்துகளில், பயணிகள் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் வந்தால், சேலம் மாவட்டத்தில் மீண்டும் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்துவிடும். எனவே, கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க, அரசு மற்றும் தனியார் பேருந்துகளில், அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்" என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x