`உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டம்; ரூ.3.21 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி: ஊரகத் தொழில் துறை அமைச்சர் வழங்கினார்

`உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டம்; ரூ.3.21 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி: ஊரகத் தொழில் துறை அமைச்சர் வழங்கினார்
Updated on
1 min read

செங்கல்பட்டு மாவட்டத்தில் `உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தின்கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, ரூ.3.21கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.

முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் பிரச்சாரத்தின்போது பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 4.40லட்சம் மனுக்கள் மாவட்ட வாரியாகப் பிரிக்கப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 13,559 மனுக்கள் பெறப்பட்டு, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையொட்டி, 137 பயனாளிகளுக்கு ரூ.3.21 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை நேற்று முன்தினம் ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.

அவர் பேசும்போது, "பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் சிறப்பு அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டு, வகைப்படுத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இதற்காக ஓர் இணையதளம் உருவாக்கப்பட்டு, அதில், மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தகுதியான மனுக்கள் மீதுஉடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, தீர்வு வழங்கப்படுகிறது. நிராகரிக்கப்படும் மனுதாரர்களுக்கு, மாற்று வழியில் அவர்களது தேவையை நிறைவு செய்வற்கான வழிகாட்டுதலும் வழங்கப்படுகிறது" என்றார்.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கே.பிரியா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், சமூகப் பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியர் ஜெயதீபன், செங்கல்பட்டு கோட்டாட்சியர் கே.சாகிதா பர்வின் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in