Published : 11 Jul 2021 03:13 AM
Last Updated : 11 Jul 2021 03:13 AM

2 நாட்களில் 12 ஆயிரம் சுவரொட்டி அகற்றம்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னை

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பேருந்து நிறுத்த நிழற்குடைகள், தெருக்களின் பெயர் பலகைகள் உள்ளிட்டவற்றில் ஒட்டப்பட்டிருந்த சுமார் 12 ஆயிரம் சுவரொட்டிகளை கடந்த 2 நாட்களில் மாநகராட்சி பணியாளர்கள் அகற்றியுள்ளனர்.

சென்னையை அழகுபடுத்த, மாநகராட்சி சார்பில் திடக்கழிவுகளை அகற்றுதல், சாலையின் மையத்தடுப்புகளில் செடிகள் நடுதல், பாலங்களில் செங்குத்துப் பூங்காக்கள் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் அரசு மற்றும் மாநகராட்சி கட்டிடங்கள், பேருந்து நிறுத்த நிழற்குடைகள், பாலங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை அகற்றும் பணிகளில் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. கடந்த 8-ம் தேதி இப்பணிகள் தொடங்கப்பட்டன. இப்பணியில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: இப்பணிகளைமாநகராட்சி பொறியியல் மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர். கடந்த 8, 9 ஆகிய 2 நாட்களில் மட்டும், அடையாளம் காணப்பட்ட1,480 இடங்களில் இருந்து 12,289 சுவரொட்டிகள் அகற்றப்பட்டன.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x