

சென்னையில் நேற்று நடைபெற்ற மைக்ரோ லெவல் லோக்-அதாலத்தில் 1,258 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டு, ரூ.25 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் மைக்ரோ லெவல் லோக்-அதாலத், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஆர்.செல்வகுமார் தலைமையில் நேற்று நடைபெற்றது.
மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு உறுப்பினர்-செயலர் நீதிபதி கே.ராஜசேகர் முன்னிலை வகித்தார். முதன்மை அமர்வு நீதிபதி ஆர்.செல்வகுமார், நிரந்தர லோக் அதாலத் நீதிபதி டி.சந்திரசேகரன் உள்ளிட்டோர் வழக்குகளை விசாரித்தனர்.
இதில் 3,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை சென்னை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலர் நீதிபதி ஆர்.தமிழ்ச்செல்வி மற்றும் நீதிபதிகள், நீதித் துறை ஊழியர்கள் செய்திருந்தனர்.
1,258 வழக்குகளுக்கு தீர்வு
இதில், விபத்து, காப்பீடு, காசோலை வழக்குகள் எனமொத்தம் 2,973 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அதில் 1,258 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன்மூலம் ரூ.25 கோடி மதிப்பிலான இழப்பீடுகள் மற்றும் பணப்பலன்கள் வழங்க உத்தரவிடப்பட்டது.
முன்னதாக, உயர் நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஆர்.செல்வகுமார் மரக்கன்றுகளை நட்டுவைத்தார்.