Published : 11 Jul 2021 03:14 AM
Last Updated : 11 Jul 2021 03:14 AM
சிவகங்கை மாவட்டம், திருப்பு வனம் அருகே கீழடி அகழாய்வில் 3 அடுக்கு உறை கிணறு கண்டறியப்பட்டது. இந்நிலையில், அதை தொட்டி என சமூக வலைதளங்களில் அமைச்சர் தங்கம் தென்னரசு குழப்பியதால் தொல்லியல் ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் பிப்.13-ம் தேதி முதல் 7-ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. இதுவரை 700-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன.
கீழடியில் இதுவரை 7 குழிகள் தோண்டப்பட்டு, மண் பானை, குவளை, காதில் அணியும் தங்க வளையம், பகடை, உழவுக் கருவி, கருப்பு, சிவப்பு நிறப் பானை ஓடுகள், மண் குவளைகள், சுடுமண், கண்ணாடி பாசிகள் கண்டறிப்பட்டன. மேலும் கொந்தகையில் 7-க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன.
இந்நிலையில் கீழடியில் 7-ம் கட்ட அகழாய்வில் முதல்முறையாக மூன்றடுக்கு கொண்ட உறை கிணறு கண்டறியப்பட்டது. மேலும் கீழே சில அடுக்குகள் இருக்கலாம் என்பதால், தொல்லியல் ஆய்வாளர்கள் தொடர்ந்து தோண்டி வருகின்றனர்.
ஏற்கெனவே, 6-ம் கட்ட அகழாய்வில் 10-க்கும் மேற்பட்ட உறைகிணறுகள் கண்டறியப் பட்டன.
ஆனால் அமைச்சர் தங்கம் தென்னரசு, ‘உறை கிணற்றை சுடுமண்ணால் ஆன அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய தொட்டி' என தனது முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் குறிப்பிட்டுள்ளார்.
குழப்பிய அமைச்சரால் தொல்லியல் ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT