Last Updated : 10 Jul, 2021 09:03 PM

 

Published : 10 Jul 2021 09:03 PM
Last Updated : 10 Jul 2021 09:03 PM

பொதுத் தேவைக்காக போராடுவது சட்டவிரோதம் இல்லை: உயர் நீதிமன்றம்

மதுரை

பொதுத் தேவையை நிறைவேற்றக்கோரி போராட்டம் நடத்துவதற்கு ஒவ்வொரு குடிமகன்களுக்கும் உரிமை உள்ளது. அப்போராட்டங்களை சட்டவிரோதம் என்று கூற முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகேயுள்ள மனம்காத்தான் கிராமத்தில் பழுதடைந்த சாலையை சீரமைக்கக் கோரி கிராம மக்கள் கடந்த 6.3.2017ல் கயத்தாறு-தேவர்குளம் மெயின்ரோட்டில் மறியல் போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது சட்டவிரோதமாக கூடுதல் உட்பட பல்வேறு பிரிவுகளில் கயத்தாறு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு கோவில்பட்டி 2வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் விசாரிக்கப்படுகிறது.

இந்த வழக்கில் நீதிமன்றத்தில் போலீஸார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரி பீர் மைதீன், அல்லாபிச்சை உட்பட 8 பேர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.இளங்கோவன் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரர்கள் தங்கள் கிராமத்திற்கான பொது சாலையை சீரமைக்கவும், செப்பனிடவும் கோரி போராட்டம் நடத்தியுள்ளனர். இப்போராட்டம் கட்டுப்படுத்தக்கூடியது தான். இதனால் போராட்டத்தை சட்டவிரோதம் என்று கூற முடியாது. பொதுத் தேவைக்காக போராட ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு.

குடிநீர், உணவுப் பொருள் தேவை மற்றும் அத்யாவசிய தேவைகளை நிறைவேற்றக்கோரி அமைதியான முறையில் நடைபெறும் போராட்டங்களை சட்டவிரோதமானதாக கருத முடியாது என ஏற்கனவே உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

இதனால் மனுதாரர்கள் நடத்திய போராட்டத்தை சட்டவிரோதம் என கூற முடியாது. இதனால் கோவில்பட்டி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x