Last Updated : 10 Jul, 2021 06:12 PM

 

Published : 10 Jul 2021 06:12 PM
Last Updated : 10 Jul 2021 06:12 PM

புதுச்சேரியில் ரூ.30 லட்சம் மதிப்பிலான போதைப் பொருட்கள், ரொக்கப் பணம், கார் பறிமுதல்: 3 பேர் கைது  

புதுச்சேரி

புதுச்சேரியில் வாடகை வீட்டை குடோனாகப் பயன்படுத்தி போதைப் பொருட்களைப் பதுக்கி விற்ற 3 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.30 லட்சம் மதிப்பிலான போதைப் பொருட்கள், ரொக்கப் பணம், கார் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

புதுச்சேரி நகரப் பகுதியான லூயி பிரகாசம் வீதியில் உள்ள ஒரு அடுக்குமாடி வீட்டில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கிழக்கு எஸ்.பி. அலுவலகத்துக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து எஸ்.பி. ஜிந்தாகோதண்டராமன் மேற்பார்வையில் சிறப்பு அதிரடிப்படை இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், இனியன் மற்றும் பெரியகடை இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீஸார் இன்று (ஜூலை 10) அதிகாலை சம்பந்தப்பட்ட வீட்டுக்குச் சென்று சோதனையிட்டனர்.

அப்போது, அங்கு குட்கா, பான்பராக் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வீட்டில் பதுங்கியிருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பாபுலால் (30), பெங்களூரைச் சேர்ந்த சுரேஷ் பிஷ்னாய் (30), கோட்டக்குப்பத்தைச் சேர்ந்த சுபன் (38) ஆகிய 3 பேரையும் போலீஸார் பிடித்துக் காவல் நிலையம் கொண்டுசென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பாபுலால், லூயி பிரகாசம் வீதியில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு வீடு வாடகைக்கு எடுத்து போதைப்பொருள் குடோனாகப் பயன்படுத்தி விற்பனை செய்துவந்தது தெரியவந்தது. இவருக்கு பெங்களூரில் இருந்து காரில் சுரேஷ் பிஷ்னாய் (31) கடத்திக் கொடுத்ததும் தெரியவந்தது.

மேலும், கோட்டக்குப்பத்தைச் சேர்ந்த சுபன் பெட்டிக்கடை வியாபாரி என்பதும், பாபுலாலிடம் இருந்து அவ்வப்போது அரசு தடை செய்துள்ள போதைப் பொருட்களை வாங்கி அவற்றைத் தனது கடையில் பதுக்கி வைத்து அப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு சப்ளை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது.

இதையடுத்து வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.6 லட்சம் மதிப்பிலான போதைப் பொருட்கள், வெளிமாநில சப்ளையரிடம் கொடுக்கத் தயாராக வைத்திருந்த ரூ.8 லட்சத்து 5 ஆயிரம் ரொக்கப் பணம், இரண்டு கார்கள், 2 மோட்டார் பைக்குகள், 6 செல்போன்கள் என மொத்தம் ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் பாபுலால் உள்ளிட்ட 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x