Published : 10 Jul 2021 04:59 PM
Last Updated : 10 Jul 2021 04:59 PM

தடுப்பூசி மருந்துகளை வீணாக்காமல் கூடுதலாக 2 லட்சம் பேருக்கு செலுத்தியுள்ளோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 

கடந்த அதிமுக ஆட்சியில் 60 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது. அப்பொழுது 6 லட்சம் டோஸ் வரை தடுப்பூசிகள் வீணடிக்கபட்டது. ஆனால் தற்போது பெறப்பட்ட தடுப்பூசி மருந்துகளை வீணாக்காமல், கூடுதலாக இரண்டு லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது, என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலைப்பகுதி பெரும்பாறையில் மலைவாழ் மக்களுக்கான கரோனா தடுப்பூசி முகாமை இன்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி முன்னிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார்.

தொடர்ந்து திண்டுக்கல்லில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது புதிதாக குழந்தைகளுக்கு என அமைக்கப்பட்டுள்ள கரோனா வார்டை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்துவைத்தார்.

ஆய்வுக்குப் பின் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கரோனா மூன்றாவது அலை வருமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

இதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான 100 படுக்கைகள் கொண்ட கரோனா வார்டு புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசின் காப்பீட்டுத் திட்டத்தை முறையாக செயல்படுத்தாத 40 தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் அந்த கரோனா சிகிச்சை அளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் 60 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது அப்பொழுது 6 லட்சம் டோஸ் வரை வீணடிக்கபட்டது.

தற்பொழுது தமிழகத்திற்கு ஒரு கோடியே 59 லட்சத்து 26 ஆயிரத்து 550 டோஸ்கள் வந்துள்ளது. ஆனால் ஒரு கோடியே 61 லட்சத்து 31 ஆயிரத்து 159 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேருக்கு கூடுதலாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மருந்து குப்பியில் 16 முதல் 24 சதவீதம் வரை கூடுதலாக மருந்து இருக்கும் இதனை வீணாகாமல் முறையாக பயன்படுத்தி ஒரு குப்பியில் இருந்து 11 முதல் 12 நபர்கள் வரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது தமிழக சுகாதார துறைக்கு கிடைத்த வெற்றியாகும். மத்திய ஐசிஎம்ஆர்., தமிழக சுகாதாரத் துறையை பாராட்டியுள்ளது.

இந்த மாதத்திற்கான மத்திய அரசின் தொகுப்பிலிருந்து 71 லட்சம் தடுப்பூசிகள் வரவேண்டும். ஆனால் இதுவரை 10 லட்சம் வரை மருந்துகள் வந்துள்ளது. நாளை அல்லது நாளை மறுநாள் 11 லட்சம் மருந்துகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பணி நேரத்தின்போது மருத்துவர்கள் பணியில் இல்லாமல் தனது சொந்த கிளினிக்கில் பணி செய்து வருவதாக புகார் வந்துள்ளது இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

தொடர்ந்து திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்றம் குறித்து ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்றார். கூட்டத்திற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமை வகித்தார். திண்டுக்கல் ஆட்சியர் ச.விசாகன், எம்.எல்.ஏ.,க்கள் இ.பெ.செந்தில்குமார், காந்திராஜன், வேலுச்சாமி எம்.பி., மற்றும் சுகாதாரத்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x