Published : 13 Feb 2016 08:31 AM
Last Updated : 13 Feb 2016 08:31 AM
அதிநவீன பாதுகாப்பு வசதி கொண்ட ஏசி ரயில் பெட்டிகளை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபாகர் பிரபு காணொலி காட்சி மூலம் நேற்று தொடங்கிவைத்தார்.
ரயில் பெட்டிகளை தயாரிப்பதில் சென்னையில் உள்ள ஐசிஎப் ரயில் பெட்டி தொழிற்சாலை முக்கியமானதாக உள்ளது. ஜெர்மன் தொழில்நுட்பம் கொண்ட எல்எச்பி ரயில் பெட்டிகளை இந்நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிலையில் முதல்முறையாக நவீன பாதுகாப்பு வசதிகள் கொண்ட எல்எச்பி ஏசி ரயில் பெட்டிகளை இந்நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும், மேற்கு ரயில்வேக்காக 12 பெட்டிகள் கொண்ட மின்சார ரயிலையும் இந்நிறுவனம் தயாரித்துள்ளது. இதற்கான தொடக்க விழா ஐசிஎப்-ல் நேற்று நடந்தது. ஐசிஎப் தலைமை பொறியாளர் எல்.சி.திரிவேதி உள்ளிட்ட அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.
இதற்கிடையே திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபாகர் பிரபு புதிய ரயில் பெட்டி மற்றும் மின்சார ரயிலை காணொலி காட்சி மூலம் நேற்று தொடங்கி வைத்தார்.
ஜெர்மன் தொழில்நுட்பம் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ள எல்எச்பி பெட்டிகள் எளிதில் தீப்பிடிக்காது, இது முழுவதும் ஸ்டீலால் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு ரயில் பெட்டி 51.7 டன் எடை கொண்டது. பாதுகாப்பாகவும் வேகமாகவும் செல்லும் வசதியுள்ளது. சொகுசு இருக்கைகள், செல்போன் சார்ஜ் போடும் வசதி உட்பட பல்வேறு வசதிகள் இதில் உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT