Published : 10 Jul 2021 03:16 AM
Last Updated : 10 Jul 2021 03:16 AM

1806-ம் ஆண்டு ஜூலை-10-ம் தேதி அதிகாலையில் வேலூர் சிப்பாய் புரட்சியில் தவறுதலாக கொல்லப்பட்ட 2 குழந்தைகள்: அதிர்ச்சி கலந்த சம்பவத்தை விளக்கும் தகவல்

வேலூர் கோட்டையில் உள்ள தொல்லியல் துறை அருங்காட்சியகத்தில், 1806-ல் நடைபெற்ற சிப்பாய் புரட்சியில் ஈடுபட்ட வீரர்கள் சிறையில் அடைக்கப்பட்டதன் காரணம் தொடர்பாக ஆங்கிலேயர்களின் குறிப்பு.

வேலூர்

இந்தியாவில் 1608-ம் ஆண்டு வாக்கில் வணிகத்துக்காக வந்த கிழக்கிந்திய கம்பெனியினர் படிப்படியாக நிலப்பரப்புகளை கைப்பற்றத் தொடங்கினர். பலம் வாய்ந்த கிழக்கிந்திய கம்பெனி படைகளுக்கு வேலூர் கோட்டை யில் 1806-ம் ஆண்டு ஜூலை 10-ம் தேதி அதிகாலை நடைபெற்ற புரட்சி ஒரு அவமானகரமான சம்ப வமாக கருதும் நிலை ஏற்பட்டது.

மெட்ராஸ் பிரிசிடென்சி படையில் இருந்த இந்திய சிப்பாய்கள் தங்களின் மத நம்பிக்கைகளுக்கு எதிராக ஆங்கிலேயர்கள் செயல்படுவதாக எண்ணியதுடன் எதிர்க்கவும் துணிந்தனர். முதல் இந்திய சுதந்திர போராட்டத்தின் வித்தாக கருதப் படும் வேலூர் கோட்டை சிப்பாய் புரட்சியில் 15 ஆங்கிலேய அதி காரிகள், 83 சிப்பாய்கள் உள்ளிட்ட சுமார் 115 பேருடன் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்ட தகவலும் பதிவாகியுள்ளது.

18-ம் நூற்றாண்டின் இறுதியில் தென்னிந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனியை தீவிரமாக எதிர்த்தவர் திப்பு சுல்தான். நான்காம் மைசூர் போரில் திப்பு சுல்தான் கொல்லப்பட்டதும் அவரது குடும்பத்தினர் சிறை பிடிக்கப்பட்டு வேலூர் கோட்டையில் அடைக்கப் பட்டனர். வேலூர் கோட்டையில் இவர் களுக்காக 180 அறைகளுடன் கூடிய திப்பு மகால், 220 அறை களுடன் கூடிய ஹைதர் மகாலில் சிறை பிடிக்கப்பட்டவர்கள் அடைக் கப்பட்டனர்.

வேலூர் கோட்டையின் கமாண்டராக கர்னல் ஃபேன் கோர்ட் இருந்தார். வேலூர் கோட்டை யில் 380-க்கும் மேற்பட்ட ஆங்கிலேயர்கள், 1,700-க்கும் மேற்பட்ட இந்திய சிப்பாய்கள் பாதுகாப்புப் பணியில் இருந்தனர். பெரும்பாலான ஆங்கிலேய அதிகாரிகள் குடும்பத்தினருடன் கோட்டையில் உள்ள குடியிருப்பு களிலும் இந்திய சிப்பாய்கள் அனைவரும் கோட்டையின் தெற்கில் உள்ள நகரப் பகுதியில் தங்கியிருந்தனர்.

இந்தியர்கள் வசம் துப்பாக்கிகள்

வேலூர் கோட்டை பாதுகாப்புப் பணியில் இருந்த இந்திய சிப்பாய்களுக்கு ஜூலை 10-ம் தேதி அதிகாலை துப்பாக்கிச் சுடும் பயிற்சிக்கு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்ன. இதற்காக, முன்தினமே (ஜூலை 9-ம் தேதி) இந்திய சிப்பாய்கள் வசம் துப்பாக்கிகள் வழங்கப்பட்டதுடன் வழக்கத்துக்கு மாறாக கோட்டையில் இரவே தங்க வைக்கப்பட்டனர். அதேநேரம், கோட்டையில் ஜூலை 9-ம் தேதி இரவு திப்புவின் ஆறாவது மகள் நூருன்-நிசா பேகத்துக்கும் சையத் நிஜாமுதீனுக்கும் நடை பெற்ற திருமண விழாவை பயன்படுத்திக்கொண்ட இந்திய சிப்பாய்கள் ஜூலை 10-ம் தேதி அதிகாலை 2 மணியளவில் ஆங்கிலேயர்களின் குடியிருப்புகளில் புகுந்து தேடித்தேடி ஆங்கிலேயர்களை சுட்டுத்தள்ளினர்.

அமைதி நிறைந்த இரவில் காதுகளை கிழித்த துப்பாக்கிகளின் சத்தம் கோட்டையின் கமாண்டர் கர்னல் ஃபேன் கோர்ட்டின் உறக்கத்தை கலைத்தது. படுக்கை அறை ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தவர் கலவரத்தின் வீரியத்தை உணர்ந்தார். அவசரமாக வீட்டில் இருந்து வெளியே வந்தவரை இந்திய சிப்பாய் ஒருவர் சுட்டதில் அங்கேயே சுருண்டு விழுந்தார். அவரது மனைவி எமிலியும் இரண்டு குழந்தைகளும் மறைவான இடத்தில் பதுங்கி உயிர் தப்பினர்.

சிப்பாய் புரட்சியில் ஈடுபட்ட வீரர்களுக்கு
அளிக்கப்பட்ட தண்டனைகுறித்த விவரம்.
படங்கள்: வி.எம்.மணிநாதன்.

காலை சூரியன் உதிப்பதற்குள் லெப்டினென்ட் ஜேம்ஸ் மெக்கரி, கேப்டன் வில்சன், லெப்டினென்ட் வின்சிப், லெப்டினென்ட் ஜோலி, கேப்டன் மில்லர், லெப்டினென்ட் ஓ-ரெய்லி, லெப்டினென்ட் டிச் போன், லெப்டினென்ட் எல்லி, லெப்டினென்ட ஃபோபம் உள் ளிட்ட 15 அதிகாரிகளுடன் ஆங்கிலேய சிப்பாய்கள் பலர் கொல்லப் பட்டனர். கோட்டையின் பல இடங்களில் ஆங்கிலேயர்களின் உடல்கள் சிதறிக்கிடந்தன.

கோட்டை முழுவதும் இந்திய வீரர்கள் கட்டுப்பாட்டில் வந்த நிலையில் ஜூலை 10-ம் தேதி காலை 9 மணிக்கு வேலூர் கோட்டையை அடைந்த கர்னல் ராலன் கில்லஸ்பி தலைமையிலான படையால் சிப்பாய் புரட்சி முறியடிக்கப்பட்டு புரட்சிக்கு காரணமான சுமார் 800 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட 2 குழந்தைகள்

சிப்பாய் புரட்சி நடந்த நேரத்தில் வீட்டில் மனைவி மற்றும் பெண் கைக் குழந்தையுடன் பதுங்கி இருந்த லெப்டினென்ட் ஜான் எல்லியும் அவரது மகளும் மர்ம நபர்களால் வாளால் வெட்டி கொல்லப்பட்டுள் ளனர். புரட்சிக்கு பிறகான விசாரணையில் குழந்தை ஒன்றின் மரணத் துக்கு எல்லிதான் காரணம் என்று தவறுதலாக நினைத்து அவரும், அவரது கைக் குழந்தையும் ஆங்கிலேயர் ஒருவரால் கொல்லப் பட்டுள்ளார்.

அதே இரவில், கோட்டை பாதுகாப்பில் இருந்த சார்ஜன்ட் பாட்டர் கொல்லப்பட்ட நிலையில் வீட்டில் இருந்த அவரது மனைவியும் மகளும் உயிருக்கு அஞ்சி மேஜர் வில்லியம் மேன் என்பவரின் வீட்டில்தஞ்சமடைந்தனர். அங்கும் பாதுகாப்பு இல்லாததால் மேஜர் வில்லியம் மேன் மற்றும் பாட்டரின் மனைவி, மகளும் சாமுவேல் கில்என்பவரின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். அதிகாலை 3 மணியளவில் சாமுவேல் கில் வீட்டுக்கு வந்த இந்திய சிப்பாய்கள் சிலர் அவரை சுட்டுக்கொன்றனர்.

அதிர்ச்சியில் இருட்டில் தப்பி யோட முயன்ற வில்லியம் மேன், பாட்டரின் மனைவி மற்றும் மகளை நோக்கி இந்திய சிப்பாய் ஒருவர் சுட்டதில் தவறுதலாக பாட்டரின் மகள் உயிரிழந்தார். பாட்டரின் மனைவி உயிர் தப்பினார். வேலூர் சிப்பாய் புரட்சி நடைபெற்ற நேரத்தில் இரண்டு குழந்தைகள் கொலை செய்யப்பட்டது தவறுதலாகவும் ஒரு விபத் தாகவும் நடந்ததாக நீதிபதி கில்லியன் என்பவரின் மனைவி 1806-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி எழுதிய கடிதத்தில் இருந்து தெரியவந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x