Published : 09 Jul 2021 06:38 PM
Last Updated : 09 Jul 2021 06:38 PM

பொதுப்பாதையை ஆக்கிரமித்து கோயில் மண்டபம்: 3 மாதங்களில் அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு

பொதுப்பாதையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள ராமாபுரம் கலசத்தம்மன் கோயில் மண்டபத்தை மூன்று மாதங்களுக்குள் அகற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, ராமாபுரத்தில் உள்ள கலசத்தம்மன் கோயில் மண்டபத்தைப் பொதுப் பாதையை ஆக்கிரமித்துக் கட்டியுள்ளதாகக் கூறி, அறப்போர் இயக்கம் சார்பில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சென்னை மாநகராட்சி ஆணையர், அப்பகுதி வட்டாட்சியர், கோயில் நிர்வாகத்தினர் அடங்கிய குழுவை அமைத்து, ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொது நிலத்தை ஆக்கிரமித்துள்ளதைக் கோயில் நிர்வாகம் ஒப்புக்கொண்டாலும், சட்டம்- ஒழுங்கு பிரச்சினையைக் காரணம் காட்டி, ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் மறுத்துவிட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், ஆக்கிரமிப்புக்களை அகற்ற விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்த நீதிபதிகள், இந்த ஆக்கிரமிப்பை மூன்று மாதங்களில் அகற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x