Published : 09 Jul 2021 06:19 PM
Last Updated : 09 Jul 2021 06:19 PM

பணமோசடி வழக்கு; சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு விலக்கு: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை

அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சென்னை உயர் நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது.

2011-15ஆம் ஆண்டுகளில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் பண மோசடி செய்ததாக கணேஷ்குமார், தேவசகாயம், அருண்குமார் உள்ளிட்டோர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்கை, எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரிய செந்தில்பாலாஜி தரப்பின் மனுவை நிராகரித்து, வழக்கில் இருந்து விடுவிக்க மறுத்த சிறப்பு நீதிமன்றம், வழக்கு விசாரணைக்காக ஜூலை 15ஆம் தேதி நேரில் ஆஜராக அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மறு ஆய்வு மனு, நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, புகார்தாரர் தரப்பில், இந்த வழக்கில் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதால் விசாரணையை ஜூலை 30ஆம் தேதிக்குத் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

அதே சமயத்தில், மனுதாரர் தரப்பில், செந்தில்பாலாஜி அமைச்சராக உள்ளதாகவும், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராக நிர்பந்திக்கப்படுவதால், அமைச்சர் பணியை மேற்கொள்ள இயலவில்லை எனவும் கூறி, நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் எனக் கோரப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு விலக்கு அளித்து உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x