Published : 09 Jul 2021 03:56 PM
Last Updated : 09 Jul 2021 03:56 PM

வரிவிலக்கில் பாரபட்சம்; ரெட் ஜெயன்ட் மூவிஸ் வழக்கு: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு 

திரைப்படங்களுக்கு கேளிக்கை வரிவிலக்கு அளிப்பதற்காக அமைக்கப்படும் குழு பாரபட்சம் இல்லாத, ஊழலற்ற நியமனங்களாக இருப்பதை உறுதி செய்யக் குழுவின் ஒட்டுமொத்த நடவடிக்கைகளையும் மாற்றி அமைக்கும் வகையில் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

படத்தலைப்பை தமிழில் வைக்கும் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என கடந்த 2007 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மற்றும் 2011 ஆம் ஆண்டு ஜூலை மாதங்களில் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதுபோன்று தலைப்புகளுடன் சமர்ப்பிக்கப்படும் படங்களை ஆய்வு செய்ய 2012 ஆம் ஆண்டு ஜனவரியில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில் தங்கள் நிறுவனம் தயாரித்த ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘நீர்ப்பறவை’, ‘வணக்கம் சென்னை’, ‘இது கதிர்வேலன் காதல்’ ஆகிய படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு கோரி தற்போதைய திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் அந்த குழுவில் 2012, 2013 ஆம் ஆண்டுகளில் விண்ணப்பித்தது.

அந்த மனுக்களை அந்த குழு நிராகரித்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதேசமயம் படங்களின் தலைப்பை ஆராயும் குழுவின் அமைத்து அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனவும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தங்களது நிறுவனம் தயாரித்த படங்களுக்கு வரிவிலக்கு கோரி ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை அணுக வேண்டிய சூழல் உள்ளதாகவும், மனுதாரரின் நிறுவனம் உதயநிதி ஸ்டாலினுக்குச் சொந்தமானது என்பதால் மட்டுமே வரிவிலக்கு அளிப்பதில் வேண்டுமென்றே பாகுபாடு காட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

வணிக வரித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் எந்தக் குறிப்பிட்ட குற்றச்சாட்டையும் கூறாமல் நிபுணர் குழுவின் செயல்பாடுகளை விமர்சித்துள்ளதாகத் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்தக் குழுவில் ஆளும் கட்சிகளுக்கு வேண்டப்பட்டவர்கள் மட்டுமே பெரும்பாலும் இடம் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், இதுபோன்று பாகுபாடு காட்டுதல், ஒரு சார்பு நிலையெடுத்தல் என்பது நாட்டின் வளர்ச்சிக்குப் பெரும் சிக்கலை ஏற்படுத்திவிடும் எனவும் தெரிவித்தார். இதுபோன்ற குழுக்களை அமைக்கும்போது அரசியலமைப்பிற்கு எதிரான நடைமுறைகள் இருந்தால் அதனை அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் எனவும் நீதிபதி அறிவுறுத்தினார்.

மேலும், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்துக்கு அதிகாரிகள் பாகுபாடு காட்டியது உறுதியாகியுள்ளதாகத் தெரிவித்த நீதிபதி, இதுபோன்று நிபுணர் குழுவை நியமிக்கும்போது உரிய தகுதியின் அடிப்படையில் பெண்களும், ஆண்களும் தேர்வு செய்யபட வேண்டும் எனவும்., பெண்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் தரப்பட்டு வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும், திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிப்பதற்காக அமைக்கப்படும் குழு பாரபட்சம் இல்லாத, ஊழலற்ற நியமனங்களாக இருப்பதை உறுதி செய்யக் குழுவின் ஒட்டுமொத்த நடவடிக்கைகளையும் மாற்றி அமைக்கும் வகையில் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x