Published : 09 Jul 2021 12:08 PM
Last Updated : 09 Jul 2021 12:08 PM

காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டம், முக்கொம்பு கதவணை திட்டம்: அமைச்சர் துரைமுருகன் ஆய்வு

சென்னை

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (09.07.2021) தலைமைச் செயலகத்தில் இரண்டாம் நாளாக துறை உயர் அலுவலர்களுடன் நீர்வளத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு நீர்ப்பாசன திட்டங்கள் செயலாக்கம் குறித்தும், பணிகளின் முன்னேற்றம் குறித்தும், புதிய திட்டங்களை உருவாக்குதல் குறித்தும் உயர் அலுவலர்களுடன் பணி ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“மதுரை மற்றும் கோயம்புத்தூர் மண்டல அளவிலான அலுவலர்களின் பணி ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மதுரை மண்டலத்தில் தாமிரபரணி கருமேனியாறு மற்றும் நம்பியாறு இணைப்புத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும், செப்பனிடுதல், புனரமைத்தல் மற்றும் புதுப்பித்தல் திட்டத்தின் கீழ் நடைபெறும் ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் நடைபெறும் புனரமைப்புப் பணிகள், உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டம் மற்றும் அணைகள் புனரமைப்புத் திட்டம் ஆகியவற்றின் கீழ் நடைபெறும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

கோவை மண்டலத்தில் செயல்படுத்தப்படும் அத்திக்கடவு அவினாசி நீர்ப்பாசன திட்டம் மற்றும் நிலத்தடி நீர் செறிவூட்டுதல், குடிநீர் வழங்கும் திட்டம், மேட்டூர் சரபங்கா நீரேற்றும் திட்டம், கீழ்பவானி திட்டப் பகுதியில் நீட்டித்தல், புனரமைத்தல் மற்றும் நவீனமயமாக்குதல் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகள், நொய்யல் உபவடிநில திட்டம், புதிய தடுப்பணைகள், அணைக்கட்டுகள் அமைத்தல் மற்றும் புனரமைப்பு செய்தல் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இன்று இரண்டாம் நாளாக திருச்சிராப்பள்ளி மற்றும் சென்னை மண்டலங்களில் நடைபெறும் பல்வேறு பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். திருச்சி மண்டலத்தில் காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம், கட்டளைக் கால்வாய், இராஜவாய்க்கால், நஞ்சை புகலூர், ஆதனூர் குமாரமங்கலம் மற்றும் முக்கொம்பு மேலணை ஆகிய இடங்களில் கட்டப்படும் கதவணை, கல்லணைக் கால்வாய், காவிரிக் கால்வாய் ஆகியவற்றில் நடைபெறும் புனரமைப்புத் திட்டங்கள் ஆகியவற்றின் பணி முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

சென்னை மண்டலத்தில் திருவள்ளூர் மாவட்டம் காட்டூர் - தத்தமஞ்சு ஏரிகளின் கொள்ளளவினை மேம்படுத்தி நீர்த்தேக்கம் அமைக்கும் திட்டப் பணிகளின் முன்னேற்றம், விழுப்புரம் மாவட்டம் கழுவேலி ஏரியை மீட்டெடுக்கும் திட்டம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கொளவாய் ஏரியினை மீட்டெடுக்கும் திட்டம், வெள்ளத் தணிப்புத் திட்டம், தூண்டில் வளைவுகள் மற்றும் கடலோரத் தடுப்புச் சுவர்கள் அமைக்கும் திட்டம் ஆகியவற்றின் பணி முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், நீர்வள ஆதாரத்தை அதிகரிக்கும் வகையில் புதிய தடுப்பு அணைகள், புதிய நீர்நிலைகளை உருவாக்குதல், பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருக்கும் நீர்நிலைகளைச் செப்பனிட முன்னுரிமை வழங்கி பணிகளை மேற்கொள்ளுதல் ஆகியவை குறித்து ஆய்வு செய்து திட்ட மதிப்பீடுகளை விரைவில் சமர்ப்பிக்குமாறு உயர் அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுரை வழங்கினார்.

இக்கூட்டத்தில் பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்திப் சக்சேனா அரசு சிறப்புச் செயலாளர் கே.அசோகன், முதன்மைத் தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி, கோவை மண்டலத் தலைமைப் பொறியாளர் முரளிதரன், சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் டி.ரவீந்தர பாபு, திருச்சி மண்டலத் தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி, மதுரை மண்டலத் தலைமைப் பொறியாளர் கிருஷ்ணன், தலைமைப் பொறியாளர் (திட்ட உருவாக்கம்) பொன்ராஜ், இணை முதன்மைத் தலைமைப் பொறியாளர் சுரேஷ்குமார், ராணி மற்றும் கண்காணிப்புப் பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள் கலந்துகொண்டனர்”.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x