Published : 09 Jul 2021 03:14 AM
Last Updated : 09 Jul 2021 03:14 AM

ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள் மூலம் 10 லட்சம் பேருக்கு கரோனா நிவாரண உதவிகள்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் தஞ்சாவூர் கிளை மூலம் பொதுமக்களுக்கு கரோனா நிவாரண உதவிகள் வழங்கும் செவ்வாடை பக்தர்கள்.

காஞ்சிபுரம்

உலகம் முழுவதும் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள் மூலம்10 லட்சம் பேருக்கு கரோனாநிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகள் மொத்தம் 270 நாட்கள் நடைபெற்றன.

கடந்த 2020-ம் ஆண்டு முதல் கரோனா வைரஸ் தொற்று, உலகம் முழுவதும் பரவியது. இந்த வைரஸ் தொற்றால் லட்சக்கணக்காண மக்கள் பாதிக்கப்பட்டனர்.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்துக்கு உலகம் முழுவதும் வழிபாட்டு மன்றங்கள் உள்ளன. இந்த வழிபாட்டு மன்றங்கள் மூலம் கரோனாநிவாரண உதவிகளை, பாதிக்கப்படும் மக்களுக்கு வழங்க, பங்காரு அடிகளார் அறிவுறுத்தினார்.

இந்த நிவாரணப் பணிகள் கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கி கடந்த ஜூன் 30-ம் தேதி வரை 270 நாட்கள் உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்றன. மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், துப்புரவு பணியாளர்கள், பார்வையற்றோர், திருநங்கைகள், சாலை ஓரம் வாழும் ஆதரவற்றவர்கள், மீனவர்கள் என 10லட்சம் பேருக்கு கரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிவாரணப் உதவிகள் மனிதர்களுக்கு மட்டுமின்றி கால்நடைகள், வன விலங்குகளுக்கும் பல்வேறு இடங்களில் செய்யப்பட்டன.

பங்காரு அடிகளார் அறிவுறுத்தலின்படி பொதுமக்களுக்கு கஷாயம், கபசுரக் குடிநீர், அன்னதானம், மருந்துகள், மருத்துவப் பொருட்கள், அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள், சானிடைசர்கள், முகக்கவசங்கள் என பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன. அரசுத் துறையுடன் சேர்ந்து தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன.

சென்னையைச் சேர்ந்த வழிபாட்டு மன்றத்தினர் கரோனாபாதித்து வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் வசதி இல்லாதவர்களின் வீடுகளை மாநகராட்சி உதவியுடன் கண்டறிந்து நோய் தொற்றில் இருந்து அவர்கள் குணமாகும் வரை வீடு, வீடாகச் சென்று சத்தான உணவுகளை வழங்கும் பணிகளை மேற்கொண்டனர். இந்த நிவாரணப் பணிகள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் மேற்பார்வையில் நடைபெற்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x