

தமிழகத்தில் 2016 சட்டப்பேரவை தேர்தலில் காந்திய மக்கள் இயக்கம் 30 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடும் என்று ஓராண்டுக்கு முன்பே அறிவித்தார் தமிழருவி மணியன். அத்துடன் 18 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டார். மற்ற தொகுதிகளில் இடதுசாரிகளை ஆதரிப்போம் என்றார்.
அதன் பிறகு மக்கள் நலக் கூட்டியக்கத்தில் சேர்ந்து சில நாட்களிலேயே வெளியேறினார். சட்டப் பேரவை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என அறிவித்தார். இந்நிலையில், மீண்டும் தனது நிலையை அவர் மாற்றிக் கொண்டுள்ளார்.
இதுபற்றி தமிழருவி மணியனிடம் கேட்டபோது, “காந்திய மக்கள் இயக்கம் 30 தொகுதிகளில் போட்டியிடவுள்ளது. இப்போது 25 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 5 வேட்பாளர்களை விரைவில் அறிவிப்பேன். மற்ற தொகுதிகளில் மக்கள் நலக்கூட்டணியை ஆதரிப்போம். ஆனால், விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால், அது மக்கள் விரோத கூட்டணி என்று சொல்லி வெளியேறிவிடுவேன். அப்துல் கலாமின் உதவியாளர் பொன்ராஜ் உட்பட மாணவர் அமைப்பினர் சிலரை எங்கள் இயக்கம் சார்பில் களமிறக்க பேசி வருகிறோம். விரைவில் அந்த முடிவை அறிவிப்போம்’’ என்றார்.