Published : 08 Jul 2021 05:56 PM
Last Updated : 08 Jul 2021 05:56 PM

பாஜகவுடன் கூட்டணி; உரிய நேரத்தில் முடிவெடுப்போம்: ஜெயக்குமார் பதில்

“பாஜகவுடன் கூட்டணி தொடருமா?, தொடராதா? என்பதைத் தனிப்பட்ட ஜெயக்குமார் கூறமுடியாது. ஒட்டுமொத்தமாகக் கட்சி எடுக்க வேண்டிய முடிவு. அதுகுறித்து உரிய நேரத்தில் கட்சி முடிவெடுக்கும்” என அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் அதிமுக தோல்வியைத் தழுவியது எனக் கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியது சர்ச்சையானது. நாங்களும் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால்தான் குறைந்த இடங்களை வென்றோம் அல்லது கூடுதலாக வென்றிருப்போம் என பாஜக தலைவர்கள் பதிலடி கொடுக்க, அதிமுக பாஜக கூட்டணி தொடர்கிறது என ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் கூட்டறிக்கை வெளியிட்டனர்.

இந்நிலையில் சி.வி.சண்முகம் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் போன்றோர் அதிமுக தலைமைக்குக் கோரிக்கை வைக்க, எங்களுக்கு பாஜக உத்தரவிட முடியாது என்று ஜெயக்குமார் பதில் அளித்தார்.

கூட்டணி தொடர்கிறது என்று ஓபிஎஸ்-இபிஎஸ் கூட்டறிக்கை விட்ட நிலையில், அதிமுக-பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஜெயக்குமார், தேர்தல் நேரத்தில் கட்சித் தலைமை உரிய முடிவெடுக்கும் எனக் கூறியுள்ளார்.

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு ஜெயக்குமார் அளித்த பேட்டி:

கடந்த தேர்தல் தோல்வி குறித்து ஆராய வேண்டும் என்று கே.டி.ராகவன் கூறியுள்ளாரே?

தேர்தல் தோல்வி குறித்து ஆராய்வது, ஆராயாமல் இருப்பது என்பது அவர்கள் கட்சியில் எடுக்க வேண்டிய முடிவு. அதுகுறித்து நான் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. ஆனால், எங்களைப் பொறுத்தவரை இது பெரிய தோல்வியே கிடையாது. எங்களுக்கும், திமுகவுக்கும் பெரிய அளவில் வாக்கு வித்தியாசம் இல்லை. நல்ல வாக்குகள்தான் நாங்கள் பெற்றுள்ளோம். வலுவான எதிர்க் கட்சியாக உள்ளோம்.

அந்த அடிப்படையில் ஆளுங்கட்சியாக வரக்கூடிய சூழ்நிலையில் எப்படி அது நடக்காமல் போனது என்பதெல்லாம் அலசி ஆராயக்கூடியவைதான்.

சி.வி.சண்முகம் கருத்தால் பாஜக-அதிமுக கூட்டணியில் விரிசல் ஏற்படுமா?

கட்சியைப் பொறுத்தவரை கடந்த சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி வைத்தோம். தற்போது உள்ளாட்சித் தேர்தல் வர உள்ளது. அந்தத் தேர்தல் வர உள்ள நிலையில்தான் கட்சிக் கூட்டணி குறித்து முடிவெடுக்கும். அந்த நேரத்தில் வெளியில் உள்ள சில கட்சிகள் உள்ளே வரலாம். உள்ளே சில கட்சிகள் இருக்கலாம். அவர்கள் கூட வெளியேறலாம். அந்த நேரத்தில்தான் கட்சி முடிவெடுக்கும்.

அதிமுக-பாஜக கூட்டணி தொடருமா?

தொடருமா?, தொடராதா? என்பதைத் தனிப்பட்ட ஜெயக்குமார் கூறமுடியாது. ஒட்டுமொத்தமாகக் கட்சி எடுக்க வேண்டிய முடிவு. அதுகுறித்து உரிய நேரத்தில் கட்சி முடிவெடுக்கும்.

இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x