Published : 08 Jul 2021 04:27 PM
Last Updated : 08 Jul 2021 04:27 PM

சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள்: விசாரணைக்குப் பட்டியலிட உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை

தமிழகக் கோயில்களில் இருந்து கடத்தப்பட்ட சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு கலைக்கப்பட்டதால் சிலை கடத்தல் சம்பந்தமான அனைத்து வழக்குகளையும் குறிப்பிட்ட அமர்வு முன் பட்டியலிட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் சொத்துகள், நகைகள் குறித்த விவரங்கள் அடங்கிய பதிவேடு காணாமல் போயுள்ளதாகவும், கோயில் சிலைகள், நகைகள் காணாமல் போயுள்ளதாகவும், பந்தநல்லூர் காவல் நிலையத்தில் பதிவான சிலை கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்கள் மாயமாகியுள்ளதாகவும் கூறி வெங்கட்ராமன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், பந்தநல்லூர் காவல் நிலையத்தில் பதிவான சிலை கடத்தல் தொடர்பான வழக்கு ஆவணங்கள் மாயமாகவில்லை எனவும், அவை புலன் விசாரணை அதிகாரி வசம் உள்ளதாகவும் தெரிவித்தார். கடத்தப்பட்ட சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

மனுதாரர் வெங்கட்ராமன், தலைமை வழக்கறிஞர் தவறான தகவல்களைத் தெரிவிப்பதாகவும், உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் பணி ஓய்வுபெற்ற பின், ஏழு புகார்கள் அளித்தும் அதன் மீது எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை எனவும் புகார் தெரிவித்தார்.

இதையடுத்து, சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு அமர்வு கலைக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இந்த அனைத்து வழக்குகளையும் குறிப்பிட்ட அமர்வு முன் விசாரணைக்குப் பட்டியலிட ஏற்பாடு செய்வதாகக் குறிப்பிட்டனர்.

பின்னர், இந்த வழக்கில் தமிழக அரசின் பதில் மனுவுக்கு பதிலளிக்க மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 2 வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x