சுகாதாரத்துறை அமைச்சரை நீக்கியதற்குப் பதில், மோடி பதவி விலகியிருக்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி கருத்து

பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்றார்.
பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்றார்.
Updated on
1 min read

மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை நீக்கியதற்குப் பதில், பிரதமர் மோடி பதவி விலகி இருக்கவேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து இன்று விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் சார்பில் விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்டத் தலைவர் சீனிவாச குமார் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலப் பொதுச் செயலாளர் சிரஞ்சீவி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கே.எஸ்.அழகிரி பேசும்போது, ''காங்கிரஸ் ஆட்சியில் 108 டாலருக்குக் கச்சா எண்ணெய் விற்றபோது, ரூ.70-க்கு பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டது. தற்போது கச்சா எண்ணெய் 50 டாலருக்கும் குறைவாக விற்கப்படுகிறது. ஆனால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்ந்துகொண்டே செல்கிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இதன் விலை குறையும்.

கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதை காங்கிரஸ் எதிர்க்கிறது. காவிரி நீரைப் பல லட்சம் ஆண்டுகளாகத் தமிழகம் பயன்படுத்தி வருகிறது. நதிநீர் ஓர் இடத்தில் உற்பத்தியானால் அது அவர்களுக்கு மட்டும் சொந்தமல்ல. கர்நாடகா காவிரி நீரை உற்பத்தி செய்யவில்லை. கங்கை நதி சீனா, பாகிஸ்தான் நாடுகளுக்கும் செல்கிறது.

அதனால் கங்கை அந்நாடுகளுக்குச் சொந்தமாகி விடுமா? மேகதாது அணை கட்டுவது குறித்துக் கர்நாடகா தமிழகத்தின் ஒப்புதலையும், ஆலோசனையையும் பெறவில்லை. இதுகுறித்து நீர்த்துறை அமைச்சர் துரைமுருகன் மத்திய அமைச்சரைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

பாஜக மக்களை மத, சாதிரீதியாக பிரிக்கின்றது. அறிவு குறைவானவர்கள் நீட் தேர்வு எழுதித் தேர்ச்சி பெறுகிறார்கள் என்று பாஜக சொல்கிறது. இது சமூக நீதிக்கு எதிரானது. அறிவியலின்படி மூளை அனைவருக்கும் ஒரே மாதிரிதான் உள்ளது. அதைப் பயன்படுத்துவதில் ஒவ்வொருவரும் வேறுபட்டு உயர்கிறார்கள்'' என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

பின்னர் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டதுடன் மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கே.எஸ்.அழகிரி கூறும்போது, ''செயற்கையான விலை ஏற்றத்தைப் பிரதமர் மோடி ஏற்படுத்தியுள்ளார். இதனால் அடிப்படைப் பொருட்களுக்கு விலையேற்றம் ஏற்படும். கலால் வரியை அதிக அளவுக்கு உயர்த்தியதால் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. பொருளாதாரம் தெரியாததால் இந்தத் தவறைச் செய்துள்ளனர். மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை நீக்கியதற்குப் பதில், பிரதமர் மோடி பதவி விலகி இருக்கவேண்டும்'' என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in