Published : 08 Jul 2021 12:58 PM
Last Updated : 08 Jul 2021 12:58 PM

மேகதாது அணை விவகாரம்; அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்துக: ராமதாஸ் வலியுறுத்தல்

மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஜூலை 08) வெளியிட்ட அறிக்கை:

"காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்று மீண்டும், மீண்டும் கூறி வரும் கர்நாடக அரசு, அதற்கான செயல் திட்டத்தை வகுப்பது குறித்து, இந்த வார இறுதியில் சட்ட வல்லுநர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் முதல்வர் எடியூரப்பா ஆலோசனை நடத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளது. கர்நாடக அரசின் இந்தப் போக்கு மிகவும் ஆபத்தானது ஆகும்.

பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, மேகதாது அணைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முதன்மை வழக்குகள் எதுவும் இல்லை; ஒரே ஒரு இடைச்செருகல் மனு மட்டும்தான் நிலுவையில் உள்ளது என்றும், அதை உடைத்தும், மத்திய அரசிடம் உரிய அனுமதிகளைப் பெற்று அணை கண்டிப்பாகக் கட்டப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கப்படாது என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் தமிழக அரசிடம் உறுதியளித்த பிறகும் கூட அணையைக் கட்டியே தீருவோம் என்று அம்மாநில அரசு கூறுவதும், அதற்கான செயல்திட்டத்தை உருவாக்குவதும் இரு மாநில உறவைச் சீர்குலைத்துவிடும். இது கண்டிக்கத்தக்கது. இத்தகைய அத்துமீறலைக் கர்நாடகம் கைவிட வேண்டும்.

கர்நாடக அரசின் இந்தப் போக்கு இரு மாநில உறவுகளுக்கு எதிரானது என்பது ஒருபுறமிருக்க, இந்த விஷயத்தில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் முறையிட்டதுடன் நமது கடமை முடிந்துவிட்டதாக நினைத்து தமிழக அரசு ஒதுங்கிவிடக் கூடாது.

மேகதாது அணை தொடர்பாக தமிழக அரசின் ஒப்புதல் பெறாமல் எந்த அனுமதியும் கர்நாடக அரசுக்கு வழங்கப்படாது என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத் உறுதியளித்திருந்தாலும் கூட, அதை மட்டுமே நம்பிக்கொண்டு மேகதாது அணை தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசு அலட்சியமாக இருந்துவிடக் கூடாது.

மேகதாது அணை விவகாரத்தில் கடந்த காலங்களில் மத்திய அமைச்சர்களாக இருந்த பலரும் இதேபோன்ற வாக்குறுதிகளை அளித்திருக்கிறார்கள். ஆனால், அவற்றையெல்லாம் கடந்துதான் 2018ஆம் ஆண்டில் மேகதாது அணை திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய அரசு அனுமதி அளித்தது.

இப்போதும் கூட 'விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி அளித்ததாலேயே மேகதாது அணையைக் கர்நாடகம் கட்டிவிட முடியாது' என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் உறுதியளித்துள்ள மத்திய அமைச்சர், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்வதாகவோ, அந்த அனுமதியின் அடிப்படையில் தயாரிக்கப்படும் எந்த ஆவணமும் செல்லாது என்றோ கூறவில்லை.

இத்தகைய சூழலில் அரசியல் காரணங்களுக்காக மேகதாது விவகாரத்தில் கர்நாடகத்தின் பக்கம் மத்திய அரசு சாயாது என்பதற்கு உத்தரவாதமில்லை.

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு தொடர்ந்து அனைத்துக் கட்சிக் கூட்டம், சட்ட வல்லுநர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்தாய்வுக் கூட்டங்களை நடத்தி புதுப்புது உத்திகளை வகுத்து வரும் நிலையில், தமிழக அரசும் கர்நாடகத்தை எதிர்கொள்வதற்கான உத்திகளை வகுக்க வேண்டும்.

மேகதாது சிக்கலில் ஒட்டுமொத்த தமிழகமும் ஒரே அணியில் ஒற்றுமையாக இருக்கிறது என்பதை மத்திய அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் நிரூபிக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது.

எனவே, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மேகதாது அணை குறித்த வழக்கை வலுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும்.

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படுவதைத் தடுப்பதற்கான அனைத்து வாய்ப்புகளையும் தமிழக அரசு பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்".

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x