மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
Updated on
1 min read

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை நிரந்தர கட்டிடம் கட்டும் வரை தற்காலிக இடத்தில் தொடங்கவும், எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை மற்றும் வெளி நேயாளிகள் பிரிவை தொடங்கவும் உத்தரவிடக்கோரி மதுரையைச் சேர்ந்த புஷ்பவனம், உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு தரப்பில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசுக்கு அனைத்து ஒத்துழைப்பும் தமிழக அரசால் வழங்கப்படும். ஜூலை 9-ல் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்கிறார். அப்போது மதுரை தோப்பூர் மருத்துவமனை தொடர்பாக பேசப்படும்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் முதல் கட்டமாக 150 எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை தொடங்குவது, வெளி நோயாளிகள் பிரிவு ஆரம்பிப்பது தொடர்பான மத்திய அரசின் பரிந்துரைகள் குறித்து ஜூலை 16-ல் நடைபெறும் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை, வெளி நோயாளிகள் பிரிவு தொடங்குவது குறித்து எடுக்கப்படும் முடிவு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 26-க்கு ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in